புதிய நிதி வரி, பெண்களுக்கான ஓய்வூதியம், சிக்கன நடவடிக்கைகள்!
பிரான்ஸ் பிரதமர் லெகோர்னுவின் அதிரடித் திட்டங்கள்!
பிரான்சில் நிலையான அரசாங்கம் அமையாத அரசியல் ஸ்திரமற்ற சூழலுக்கு மத்தியில், பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு 2026-ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யவுள்ளார். எதிர்க்கட்சிகளின் கண்டனத்தைத் தவிர்த்து, வரவுசெலவுத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் நம்பிக்கையில், வாரம் முழுவதும் தனது முக்கியத் திட்டங்கள்குறித்த சில தகவல்களை அவர் வெளியிட்டு வருகிறார்.
சர்ச்சைக்குரிய சட்டப்பிரிவு 49.3 கைவிடப்பட்டது!
மிகப்பெரிய அரசியல் நகர்வாக, பிரதமர் லெகோர்னு சர்ச்சைக்குரிய 49.3 சட்டப் பிரிவைப் பயன்படுத்தப் போவதில்லையென அறிவித்துள்ளார். இந்தச் சட்டப் பிரிவு, நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு இல்லாமலேயே ஒரு சட்டத்தை நிறைவேற்றப் பிரதமருக்கு அதிகாரம் வழங்குகிறது. இந்த அதிகாரத்தைக் கைவிடுவதன் மூலம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதத்தில் பங்கேற்று "தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்" என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். அடுத்த வாரம் முதல் வரவுசெலவுத்திட்டம் மீதான விவாதங்கள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் லெகோர்னுவின் திட்டங்கள், ஒருபுறம் அரசின் செலவுகளைக் குறைப்பதையும், மறுபுறம் சமூக நீதியை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
புதிய "நிதி சொத்து வரி": பெரும் செல்வந்தர்களின் சொத்துக்களுக்கு 2% வரி விதிக்கும் "சுக்மன் வரி" திட்டத்தை "பொருளாதாரத்திற்கு ஆபத்தானது" என்று நிராகரித்த லெகோர்னு, அதற்குப் பதிலாக ஒரு புதிய வரியை முன்மொழிந்துள்ளார். குடும்பத்தின் ஹோல்டிங் நிறுவனங்கள் (holdings familiales) மூலம் வரி ஏய்ப்பைத் தடுக்கும் நோக்கில், ஒரு புதிய "நிதி சொத்து வரி" (Taxe sur le patrimoine financier) உருவாக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
சாதாரண மக்களுக்கு வரிக்குறைப்பு: குறைந்தபட்ச ஊதியத்தை (Smic) விடச் சற்று அதிகமாகச் சம்பாதிக்கும் தம்பதிகளுக்கு வருமான வரியைக் குறைப்பது குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது.
பெண்களின் ஓய்வூதியத்தில் கவனம்: 2023-ஆம் ஆண்டின் ஓய்வூதிய சீர்திருத்தத்தை நிறுத்தி வைப்பதற்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள லெகோர்னு, வரவிருக்கும் சமூகப் பாதுகாப்பு வரவுசெலவுத்திட்டத்தில் பெண்களுக்கான ஓய்வூதியத்தை மேம்படுத்த உறுதியளித்துள்ளார்.
அரசின் செலவுகள் குறைப்பு: அரசின் நிர்வாகச் செலவுகளை (train de vie) 6 பில்லியன் யூரோக்கள் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சமூக நலத் திட்டங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் செலவினங்களைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கைவிடப்பட்ட திட்டங்களும், குறியீட்டு நடவடிக்கைகளும்
முன்னதாக, இரண்டு பொது விடுமுறை நாட்களை ரத்து செய்வதன் மூலம் 4.2 பில்லியன் யூரோக்களை ஈட்ட முடியும் என்ற திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேலும், ஒரு குறியீட்டு நடவடிக்கையாக, முன்னாள் பிரதமர்களுக்கு வழங்கப்படும் "வாழ்நாள் சலுகைகளை" ரத்து செய்வதாகவும் லெகோர்னு அறிவித்துள்ளார். அரசின் செலவுகளைக் குறைப்பதில் மிகவும் உறுதியாக இருப்பதை உணர்த்தவே இந்த நடவடிக்கை.
மொத்தத்தில், பிரதமர் லெகோர்னுவின் இந்த வரவுசெலவுத்திட்டம் கத்திமேல் நடக்கும் சாகசத்திற்கு ஒப்பானது. நிதிப் பற்றாக்குறையை 5.4%-லிருந்து 4.7%-ஆகக் குறைக்கும் அதே வேளையில், மக்கள் நலத் திட்டங்களையும் அவர் உறுதி செய்ய வேண்டியுள்ளது. அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தொடங்கவிருக்கும் இந்த வரவுசெலவுத்திட்ட விவாதங்கள், லெகோர்னு அரசின் எதிர்காலத்தையே நிர்ணயிக்கும் சக்தியாக அமையப்போகிறது.
சிவா சின்னப்பொடி.


