பலதும் பத்தும். 13.11,2025 - மன்னாரில் மாவீரர் பெற்றோர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு!
பிரித்தானியாவில் ஸ்டார்மருக்கு எதிராக அதிர்ச்சி முடிவு!
சென்னை லயோலா கல்லூரியில்
சென்னை லயோலா கல்லூரியில் பட்டப் பின் படிப்பை (Postgraduate Studies) மேற்கொண்டு வரும் மாணவர்கள், தமது கல்வி நடவடிக்கையின் ஒரு பகுதியாக இலங்கைக்கு 10 நாள் கல்விச் சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ளனர்.
அவர்கள் நேற்று புதன்கிழமை (12) யாழ்ப்பாண மாவட்டத்துக்கு வருகை தந்து, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை தந்தை செல்வா கலையரங்கில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
போருக்குப் பின்னரான சமூக, பொருளாதார மற்றும் நிர்வாக நிலைமைகள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளும் நோக்கில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் தனது நிர்வாக அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டதுடன், அவர்கள் முன்வைத்த கேள்விகளுக்கும் விரிவாகப் பதிலளித்தார்.
அரச சேவைக்காக முறையான சம்பளக் கட்டமைப்பு
அரச சேவைக்காக முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கும், தொழில்சார் தரத்தை மேம்படுத்துவதற்கும் தேவையான திட்டம் மற்றும் முறையான நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் அடங்கிய உப குழுவின் இடைக்கால அறிக்கையைத் தயாரித்து, எதிர்வரும் 13ஆம் திகதி பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் கையளிக்கத் தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாரச்சி தெரிவித்தார்.
மன்னாரில் மாவீரர் பெற்றோர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு!
மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் ஏற்பாட்டில் “ மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு ” இன்று மன்னாரில் உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வு 150 மேற்பட்ட மாவீரர்களின் உறவுகளின் பங்கேற்புடன் நடைபெற்றுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் வாழும் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைத்து அவர்களை கெளரவிக்கும் முகமாக மன்னார் இரணை இலுப்பை குளம்,முள்ளிக்குளம் பண்டிவிருச்சான் பிரதேசத்தை சேர்ந்த 95 மாவீரர்களின் பெற்றோர் கெளரவிக்கப்பட்டனர்.
இம்மதிப்பளிப்பில் அருட்தந்தையர்கள்,முன்னைய நாள் போராளிகள் மற்றும் மாவீரர் பெற்றோர்கள், மக்கள் என பலர் பங்குபற்றியிருந்தனர். முதலில் மாவீரர் பெற்றோர்களால் பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு ,மலர்மாலை அணிவிக்கப்பட்ட பின் அக வணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.
குறித்த நிகழ்வில் மாவீரர் தியாகங்கள் குறித்த பேச்சுக்கள் நடைபெற்றதுடன் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோருக்கு கெளரவிப்பு வழங்கப்பட்டதுடன் கெளரவிப்பு நினைவாக மரக்கன்றுகள் மாவீரர் பெற்றோர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவில் ஸ்டார்மருக்கு எதிராக அதிர்ச்சி முடிவு!
பிரித்தானிய பிரதமர் பதவியில் கெய்ர் ஸ்டார்மர் நீடிக்கலாமா என்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மக்கள் அளித்துள்ள பதில் அவருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. பிரதமர் பதவியில் ஸ்டார்மர் நீடிக்கலாமா?
பிரதமர் பதவியில் ஸ்டார்மர் நீடிக்கலாமா என கேட்கப்பட்ட கேள்விக்கு, வெறும் 27 சதவிகிதம் பேர் மட்டுமே, நீடிக்கலாம் என பதிலளித்துள்ளார்கள்.
51 சதவிகிதம் பேர், ஸ்டார்மர் பதவி விலகவேண்டும், அவருக்கு பதிலாக வேறொருவர் அந்த பொறுப்பை ஏற்கவேண்டும் என கூறியுள்ளார்கள்.
23 சதவிகிதம் பேர், தங்களால் எந்த முடிவையும் எடுக்கமுடியவில்லை என்று கூறியுள்ளார்கள்.
கன்சர்வேட்டில் கட்சிக்கு மக்களிடையே எதிர்ப்பு உருவாகி, அந்த எதிர்ப்பு லிபரல் கட்சிக்கு வாக்குகளாக மாற, கெய்ர் ஸ்டார்மர் பிரித்தானிய பிரதமர் ஆனார்.
ஆனால், புலம்பெயர்தல் முதலான பல்வேறு பிரச்சினைகளை அவர் சரியாக கட்டுப்படுத்தவில்லை என்னும் எண்ணம் மக்களுக்கு உருவாகியுள்ளது.அத்துடன், ஸ்டார்மர் கட்சியிலுள்ள அவரது சக நாடாளுமன்ற உறுப்பினர்களே அவருக்கு எதிராகத் திரும்பி வருகிறார்கள்.
இதற்கிடையில், பிரதமரின் ஆட்சியைக் கவிழ்க்க சதி நடப்பதாக நேற்று வெளியான தகவலால் பரபரப்பு உருவானது நினைவிருக்கலாம். ஆக, பிரித்தானியாவில் ஸ்டார்மருக்கு ஆதரவு குறைந்துவருவது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
மலேசியப் பெண் கைது – குடிவரவு அலுவலகத்தில் பரபரப்பு!
மலேசிய குடிவரவு அலுவலகத்தில் 8 வயது இலங்கை சிறுவனுக்கு மலேசிய கடவுச்சீட்டை சட்டவிரோதமாகப் பெற முயன்றதற்காக 30 வயது மலேசியப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் காலை 9.30 மணியளவில், அந்தப் பெண் சிறுவனுடன் கடவுச்சீட்டு கவுண்டருக்குச் சென்று கடவுச்சீட்டு விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
நேர்காணல் செயல்பாட்டின் போது, சிறுவனின் பிறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளபடி அவரது பெயர் மற்றும் தனிப்பட்ட விவரங்கள் குறித்த அடிப்படை கேள்விகளுக்கு பதிலளிக்கத் தவறியதால் குடிவரவு அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர்.
சட்டவிரோத செயல்
விசாரணைகளில் பின்னர் அந்தப் பெண்ணுக்கு சிறுவனுக்கு குடும்ப உறவு இல்லை என்பதும், கடவுச்சீட்டு விண்ணப்ப முயற்சிக்கு தயாராவதற்காக அவருடன் இரண்டு வாரங்கள் பயிற்சி பெற்றிருப்பதும் தெரியவந்தது.
அந்தப் பெண் 1959/63 குடிவரவுச் சட்டத்தின் கீழ் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காகக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.சட்டவிரோதமாக கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்க அல்லது பயண ஆவணங்களை தவறாகப் பயன்படுத்த முயற்சிப்பது மலேசிய சட்டத்தின் கீழ் கடுமையான குற்றமாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பரிசில் வீதியை முடக்கி பட்டாசு வெடிப்பு 11 பேர் கைது!
பிரான்ஸ் தலைநகர் பரிசில் 11 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் அனுமதி இல்லாமல் பட்டாசுகளை வெடித்து சட்ட ஒழுங்கை சீர்குலைத்தார்கள் எனும் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
வீடியோ பாடல் ஒன்றின் படப்பிடிப்பில் ஈடுபட்ட அவர்கள், பாதுகாப்பு நடவடிக்கை எதுவும் இல்லாமல், சட்ட ஒழுங்கை சீர்குலைப்பது போன்று பட்டாசுகளை வெடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Rue Érard வீதியை அவர்கள் முழுவதுமாக முடக்கியுள்ளனர். படக்குழு, பாடகர் என மொத்தமாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன
பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யும் பரிந்துரை கையளிப்பு!
பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யும் பரிந்துரை கையளிப்பு.பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்வது தொடர்பான பரிந்துரை அறிக்கை நீதி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பில் ஆராயும் குழுவின் தலைவர் ரியன்சி அர்சகுலரத்ன குறித்த அறிக்கையை நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்காரவிடம் கையளித்துள்ளார்.
சட்டவிரோதமாக தமிழகம் சென்ற இலங்கையர் கைது!
இந்திய எல்லைக்குள் சட்ட விரோதமான முறையில் உட்பிரவேசித்த இலங்கை பிரஜை ஒருவரை மண்டபம் கடற்கரை பொலிஸார் இன்று (13) கைது செய்துள்ளனர்.
தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதானவர் மன்னார் வங்காலை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் படகு மூலம் சட்டவிரோதமான முறையில் இந்திய எல்லைக்குள் உட்பிரவேசித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அவரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.


