பஹல்காம் தாக்குதலை கண்டித்த ஐநா பாதுகாப்பு கவுன்சில்! இதுலையும் இறங்கி வேலை பார்த்த சீனா+பாக்.!
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப், "நடுநிலையான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயார்" என்று கூறியிருக்கிறார்.

காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு உலகமே கண்டனம் தெரிவித்து வருகிறது. அந்த வகையில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த கண்டன அறிக்கையில் தலையீடு செய்து கண்டனத்தின் தீவிரத்தை சீனாவும், பாகிஸ்தானும் மாற்றியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
வழக்கமாக தீவிரவாத தாக்குதலை கண்டித்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் விடுக்கும் அறிக்கைகள் தீவிரமாக இருக்கும். ஆனால் பஹல்காம் தாக்குதலை கண்டித்து விடுத்த அறிக்கை அப்படி இல்லை.
கடந்த 2019ம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலை கண்டித்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில், தாக்குதலை கடுமையாக கண்டித்திருந்ததுடன், இந்திய அரசுடன் நேரடியாக அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று கறாராக சுட்டிக்காட்டி இருந்தது. ஆனால் பஹல்காம் தாக்குதல் அறிக்கையில் இப்படி கறாராக குறிப்பிடப்படவில்லை. மாறாக, "விசாரணை அதிகாரிகளுடன் ஒத்துழைக்க வேண்டும்" என்று மட்டுமே கூறப்பட்டிருக்கிறது.
அறிக்கையில் இந்திய அரசு என்கிற வார்த்தை இடம் பெறவில்லை. இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் சீனா-பாகிஸ்தானின் வலியுறுத்தல்கள்தான் என்று சொல்லப்படுகிறது. பாகிஸ்தான்-சீனா இணைந்து அறிக்கையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும். அதன் அடிப்படையில்தான் இந்த மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்று சர்வதேச அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த மாற்றத்தை செய்யும் அளவுக்கு சீனாவுக்கு ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரம் இருக்கிறது. சீனா நிரந்தர உறுப்பினர். மட்டுமல்லாது சீனாவின் முன்னெடுப்புகள் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் கொள்கைகளில் தலையீடு செய்யும் அளவுக்கு அந்நாட்டுக்கு செல்வாக்கு இருக்கிறது.
ஆரம்பத்திலிருந்து இந்த தாக்குதலுக்கும் எனக்கும் தொடர்பு கிடையாது என்று பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்து வருகிறது. ஆனால், தாக்குதலுக்கு தி ரெசிஸ்டன்ட் பிரண்ட் என்கிற அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. லக்ஷர் இ தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் கிளைதான் இந்த ரெசிஸ்டன்ட் பிரண்ட் அமைப்பு. இதற்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உதவி செய்து வருகிறது என்று சொல்லப்படுகிறது. அப்படி இருப்பின், பாகிஸ்தானுக்கும் இந்த தாக்குதலுக்கும் எப்படி தொடர்பு இல்லாமல் இருக்கும்? என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். அதேநேரம், இந்த சந்தேகத்தை வலுப்படுத்திய மற்றொரு விஷயம் பாகிஸ்தானின் நடவடிக்கைகள்தான். அதாவது, தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்த அந்நாட்டு அரசு, தாக்குதல் நடத்தியவர்களை கண்டிக்கவில்லை.
மறுபுறம் ஐநா பாதுகாப்பு கவுன்சில் அறிக்கையை எடுத்துக்கொண்டால், புல்வாமா தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பெயர் வெளிப்படையாக குறிப்பிடப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பஹல்காம் தாக்குதலில் தீவிரவாத அமைப்பின் பெயர் குறிப்பிடப்படவில்லை. சொல்லிக்கொள்ளும்படியான ஆறுதலான விஷயம் என்னவெனில், "பயங்கரவாதத்தால் ஏற்படும் உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு வரும் அச்சுறுத்தலுக்கு எதிராக அனைவரும் அனைத்து வழிகளிலும் தீவிரமாக போராட வேண்டும்" என்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூறியிருப்பதுதான்.
அதேபோல இந்தியா மற்றும் பாகிஸ்தான் இருவரும் அமைதியை பாதுகாக்க அதிகபட்ச ஒழுங்கை கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது. இந்த அறிக்கை ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப், "நடுநிலையான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயார்" என்று கூறியிருக்கிறார். ஆனால் இந்தியாவின் விசாரணைக்கு ஒத்துழைப்பதை பற்றி தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.