மீண்டும் தாக்குதலுக்குள்ளான சின்னத்துரை: நடந்தது என்ன? - காவல்துறை விளக்கம்!
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவனை நேரில் சந்தித்த காவல்துறை துணை ஆணையர் வினோத் சாந்தாராம்,

நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்தில் நடந்தது என்ன? என நெல்லை காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை என்ற மாணவரை, சக மாணவர்கள் வீடு புகுந்து தாக்கிய சம்பவம், தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அவர் மீண்டும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவனை நேரில் சந்தித்த காவல்துறை துணை ஆணையர் வினோத் சாந்தாராம், சிகிச்சை முறைகள் குறித்துக் கேட்டறிந்ததோடு, சம்பவம் குறித்தும் விசாரணை மேற்கொண்டார்.
காவல்துறை விளக்கம்:
சின்னத்துரைக்கு நடந்தது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "சின்னத்துரை நேற்று (ஏப்ரல் 16) மாலை சுமார் 6.15 மணியளவில் தனது நண்பரைப் பார்க்க பாளையங்கோட்டை செல்வதாக தாயார் அம்பிகாவிடம் கூறிவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து சென்றுள்ளார். தொடர்ந்து, சுமார் 7.30 மணியளவில் அடையாளம் தெரியாத நபரின் அலைப்பேசி மூலம் தனது தாயாரை தொடர்பு கொண்டு, மாவட்ட அறிவியல் மையம் அருகிலுள்ள பகுதியில் வைத்து அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் தன்னை தாக்கியதாகத் தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர், தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, வலது கையில் சிறிய காயத்துடன் இருந்த சின்னதுரையை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த சின்னதுரையிடம் விசாரித்த போது, தனது இன்ஸ்டாகிராம் நண்பரின் அழைப்பின் பேரில் கொக்கிரகுளம் அருகிலுள்ள வசந்தம் நகர் விரிவாக்கப்பகுதிக்கு சென்றதாகவும், அங்கு வந்த அடையாளம் தெரியாத 4 நபர்கள் பணம் கேட்டதாகவும், அவரிடம் பணம் இல்லாததால் கட்டையால் தாக்கிவிட்டு, செல்போனைப் பறித்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
மேற்படி, விசாரணைக்காக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பயனர் பெயரையும், கடவுச்சொல்லையும் கேட்ட பொழுது தனக்கு மறந்து விட்டதாகவும், அவரது இன்ஸ்டாகிராம் கணக்கினை மீட்டெடுப்பதற்காக அவரது மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லைக் கேட்ட பொழுது அதுவும் தனக்கு மறந்து விட்டதாகக் கூறியுள்ளார். பின்னர், சின்னதுரையின் கையில் ஏற்பட்ட சிறிய காயத்திற்கு சிகிச்சை முடித்து தனது சொந்த விருப்பத்தின் பேரில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2023ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, சக மாணவர்களால் தாக்கப்பட்டார். மேலும், அதனைத் தடுக்க முயன்ற சின்னத்துறையின் தங்கைக்கும் காயம் ஏற்பட்டது. சுமார் ஆறு மாத காலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைகளுக்கு பிறகு உடல் நலம் தேறிய சின்னத்துரை, தற்போது பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
மேலும், அவர்களது குடும்பத்துக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறப்பட்டதால், பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியில் உள்ள அரசு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீடு ஒதுக்கப்பட்டது, அங்கே வசித்து வருகின்றனர். இந்த சூழலில், இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.