அரசியலுக்காக இனவாதத்தையும் மதவாதத்தையும் பயன்படுத்தியதே பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் - முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீன் காட்டம்!
அரசியலுக்காக நாட்டை குட்டிச்சுவராக மாற்றியவர்கள் அரசியல்வாதிகளே!
இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு இன்றுவரை அரசியலுக்காக இனவாதத்தையும் மதவாதத்தையுமே பயன்படுத்தி வந்ததன் காரணமாகவே, இந்த நாடு பொருளாதாரத்தில் அதல பாதாளத்தை அடைந்தது என முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு, கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் அனைத்துப் பாடங்களிலும் A சித்தி பெற்ற மாணவர்களையும், மருத்துவ மற்றும் பொறியியல் ஆகிய துறைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களையும் கௌரவிக்கும் விழா வியாழக்கிழமை(16) கிண்ணியா மத்திய கல்லூரி, அப்துல் மஜீத் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாடு பொருளாதாரத்தில் வீழ்ந்ததன் காரணமாக, படித்தவர்களும் புத்திஜீவிகளும் மாத்திரமன்றி, அரச ஊழியர்களும் இந்த நாட்டை விட்டு ஓடினர். இதன் காரணமாக, நாட்டை மீண்டும் கட்டி எழுப்புவது ஒரு சவாலான விடயமாக மாறியது.
அத்துடன், அரசியலுக்காக நாட்டை குட்டிச்சுவராக மாற்றியவர்கள் அரசியல்வாதிகளே எனவும், இந்த நிலை மாற வேண்டும்.
மேலும், இவ்வாறான கௌரவிப்பு விழாக்கள் மூலம், நாட்டில் இனங்களுக்கிடையே ஐக்கியத்தையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.
இன்று கௌரவிக்கப்படும் மாணவர்கள், எதிர்காலத்தில் கல்வியில் சிறந்த புலமைகளைப் பெற்று, இந்த நாட்டில் இருக்கின்ற இனவாத சிந்தனையை மதவாத சிந்தனையை மாற்றி அமைத்து, நாட்டுக்குச் சிறந்த பங்களிப்பினைச் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.


