மாலைத்தீவு போதைப்பொருள் கடத்தல் 5 இலங்கையர்களை 30 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை!
மீனவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக கடற்படை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளும் மாலைத்தீவுக்குச் சென்றிருந்தனர்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 இலங்கையர்களை 30 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரிக்க மாலைத்தீவு பாதுகாப்பு பிரிவினர் தீர்மானித்துள்ளனர்.
கடந்த நவம்பர் 7ஆம் திகதி அவிஷ்க புத்தா எனும் பலநாள் மீன்பிடிப் படகு, மாலைத்தீவு கடல் எல்லைக்குள் 355 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் அந்நாட்டு பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்டது.
இதன்போது படகில் இருந்த ஐந்து இலங்கை மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை கடற்படை, பொலிஸ் மற்றும் மாலைத்தீவு பாதுகாப்புப் படை மற்றும் அந்நாட்டு பொலிஸார் இணைந்து மேற்கொண்ட கூட்ட விசாரணையை அடுத்தே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதற்கமைய, குறித்த மீனவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளும் அண்மையில் மாலைத்தீவுக்குச் சென்றிருந்தனர்.
எனினும், அந்நாட்டு பாதுகாப்புப் படைகள் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிப்பதற்கான உத்தரவைப் பெற்றுள்ளதால், அவர்களை இலங்கைக்கு அழைத்து வர முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, மாலைத்தீவு சென்ற இலங்கை பாதுகாப்புப் படையின் அதிகாரிகள் அடுத்த இரண்டு நாட்களுக்குள் நாடு திரும்ப உள்ளனர்.


