இரானிய எண்ணெய் மீதான தடைகளை நீக்குவது குறித்து பரிசீலிக்கும் அமெரிக்கா
மத்திய கிழக்கு போர் காரணமாக கப்பல் போக்குவரத்து மற்றும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், உலகம் முழுவதும் எரிசக்தி விலைகள் உயர்ந்து வருகின்றன.
இரானில் தாங்கள் நடத்தி வரும் போரினால் எரிசக்தி சந்தைகளில் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த அமெரிக்கா போராடி வரும் நிலையில், பகுதியளவிலான இரானிய கச்சா எண்ணெய் மீதான தடைகளை நீக்குவது குறித்து அந்நாடு பரிசீலித்து வருகிறது.
அமெரிக்காவின் கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் ஃபாக்ஸ் நேர்காணல் ஒன்றில் இந்த யோசனையை முன்வைத்தார், ‘சர்வதேச அளவில் அதிக எண்ணெய் கிடைக்க இது உதவும்’ என்றும் கூறினார்.
மத்திய கிழக்கு போர் காரணமாக கப்பல் போக்குவரத்து மற்றும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், உலகம் முழுவதும் எரிசக்தி விலைகள் உயர்ந்து வருகின்றன.
இந்த நடவடிக்கை செயல்படுத்தப்பட்டால், அது நீண்டகால அமெரிக்கக் கொள்கையின் ஒரு வியக்கத்தக்க மாற்றமாக அமையும். மேலும் இது மிகவும் நிச்சயமற்ற பலனைக் கொண்ட ஒரு நடவடிக்கையாக இருக்கும்.
இது கச்சா எண்ணெய் விலைகளில் குறைந்த அளவிலான தாக்கத்தையே ஏற்படுத்தும் என்றும், இரானிய ஆட்சிக்குச் செல்லும் நிதியை இது அதிகரிக்கக்கூடும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
போருக்கு முன்பு, இரானில் இருந்து வெளியேறும் எண்ணெயை வாங்கும் முதன்மை நாடாக சீனா இருந்தது; அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் விதித்த தடைகள் காரணமாக பெரும் தள்ளுபடி விலையில் அந்த எண்ணெய் பேரல்களை அது பெற்று வந்தது.
வியாழக்கிழமை (மார்ச் 19) அன்று ஃபாக்ஸ் பிசினஸ் நிகழ்ச்சி ஒன்றில் அளித்த நேர்காணலில், “விற்பனைக் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிப்பது, இந்தியா, ஜப்பான் மற்றும் மலேசியா போன்ற எண்ணெய் தேவைப்படும் பிற நாடுகளுக்கு அந்த விநியோகங்களில் பெரும்பகுதியைத் திசைதிருப்ப உதவும் என்றும், அதே நேரத்தில் சீனாவை ‘சந்தை விலையை’ செலுத்த நிர்பந்திக்கும்” என்றும் பெசென்ட் கூறினார்.
ஏற்கெனவே கடலில் இருக்கும் இரானிய கச்சா எண்ணெய் மீதான விற்பனைக் கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக அவர் கூறினார், இது சுமார் 140 மில்லியன் பேரல்கள் ஆகும். இது 10 முதல் 14 நாட்களுக்கு உலகளாவிய எண்ணெய் விலைகளைக் குறைக்கும் என்று அவர் மதிப்பிட்டுள்ளார்.
ஆனால், சாத்தியமான இந்த விலக்கு எவ்வாறு செயல்படும் அல்லது விற்பனை மூலம் கிடைக்கும் பணம் இரானிய அரசாங்கத்திற்குத் திரும்பச் செல்வதைத் தடுப்பதற்கான விதிகளை இது உள்ளடக்குமா என்பது குறித்த விரிவான தகவல்களை பெசென்ட் தெரிவிக்கவில்லை. இந்த முன்மொழிவு குறித்த கூடுதல் விவரங்களை வழங்க அமெரிக்க கருவூலத் துறை மறுத்துவிட்டது.


