2026 ஐ அபிவிருத்தியின் புதிய அத்தியாயமாக மாற்றியமைப்போம் - வடமாகாண ஆளுநர் வேதநாயகன்
,
அண்மைய இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, புதிய அபிவிருத்தி அத்தியாயத்தை நோக்கி வடக்கு மாகாணத்தை நகர்த்துவதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்த பாதிப்புகள் குறித்தும், அதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் நிவாரண மற்றும் தீர்வு நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. அத்தோடு, மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதிகளின் பயன்பாடு மற்றும் திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநரால் மூன்று முக்கிய முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன.
1. தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையை மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, அங்குள்ள புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை மட்டும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையுடன் இணைப்பது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
2. கல்வித்துறையை மேம்படுத்தும் நோக்கில், வட்டுக்கோட்டை வலயக் கல்வி அலுவலகத்தை புதிதாக உருவாக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
3. மத்திய சுகாதார அமைச்சின் நிதியுதவியுடன், பெண் நாய்களுக்கான கருத்தடை சிகிச்சை (Sterilization) மேற்கொள்ளும் விசேட பொறிமுறைக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் சி.சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் அரச உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.


