பலதும் பத்தும். 10.03.2026 - ஈரானின் புதிய அலை ஏவுகணைத் தாக்குதல்!
போரில் வெற்றி பெற அமெரிக்கா எவ்வளவு தூரத்திற்கும் செல்லும்!
எரிவாயு பற்றாக்குறை - இந்தியாவில் உணவகங்களுக்கு பூட்டு!
சமையல் எரிவாயு பற்றாக்குறை காரணமாக நாளை முதல் தங்கள் உணவகங்களை இயக்க முடியாது என்று பெங்களூரு ஹோட்டல்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேற்கு ஆசியாவில் நடந்து வரும் போர் காரணமாக எரிவாயு விநியோகம் கிட்டத்தட்ட முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈரானின் புதிய அலை ஏவுகணைத் தாக்குதல்!
இஸ்ரேலை இலக்குவைத்து கடந்த ஒரு மணித்தியாலத்துக்குள் புதிய அலை ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் முன்னெடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.எனினும் தற்போது இந்த தாக்குதல்கள் முடிவுக்கு வந்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இத் தாக்குதல் இஸ்ரேலின் மூன்று இடங்களில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப் பதற்றமான சூழலைக் கருத்திற்கொண்டு கட்டார் அரசாங்கம் தனது நாட்டு மக்களுக்கு அவசர பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தமது ஆதரவின்றி தெரிவாகும் தலைவர் நீண்ட காலம் உயிருடன் இருக்கப்போவதில்லை - ட்ரம்ப்
ஈரான் மீதான தாக்குதலை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து எடுக்கப்படும் ஒரு பரஸ்பர முடிவாக இருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருவரும் கலந்துரையாடி வருகின்றோம். சரியான நேரத்தில் நான் ஒரு தீர்மானத்தை எடுப்பேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
போரில் வெற்றி பெற அமெரிக்கா எவ்வளவு தூரத்திற்கும் செல்லும்!
ஈரான் உடனான போரில் வெற்றி பெறுவதற்கு எவ்வளவு தூரம் செல்ல வேண்டுமோ, அவ்வளவு தூரம் செல்ல அமெரிக்கா தயாராக உள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ஒரு இராணுவ நடவடிக்கையில் எல்லைகள் என்ன என்பதை எதிரியிடமோ, ஊடகத்திடமோ அல்லது வேறு யாருடமோ வெளிப்படுத்தக் கூடாது. அமெரிக்கா வெற்றிக்காகப் போராடுகிறது, ஈரானின் சரணடைதலுக்கான நிபந்தனைகளை டொனால்ட் டிரம்ப் தீர்மானிப்பார்.
ஈரானால் போரிட முடியாது என்பது எங்களுக்குத் தெரியும். அவர்களுக்குத் தெரிந்தாலும் இல்லாவிட்டாலும், அவர்கள் போர்க்களத்தில் செயலற்றவர்களாகி, சரணடைவார்கள் என்று ஹெக்செத் குறிப்பிட்டார். மேலும், ஈரானின் கடற்படை பெரும்பாலும் அழிந்துவிட்டது என்றும், அது தொடர்ந்து வலுவிழந்து கொண்டே இருக்கும் என்றும் அவர் கூறினார். இது ஒரு ஆரம்பம் மட்டுமே என்று அவர் எச்சரித்துள்ளார்.
நயினாதிவில் இரு பூசாரிகளுக்கிடையே மோதல் - ஒருவர் வெட்டிப் படுகொலை.
நயினாதீவில் இரு பூசாரிகளுக்கிடையே ஏற்பட்ட தகராறு வாள் வெட்டில் முடிந்ததில் ஒருவர் பலியானார். குறித்த சம்பவம் இன்று மாலை நயினாதீவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் குறித்து தெரியவருகையில் - நயினாதிவு வீரகத்தி வினாயகர் ஆலய பூசகருக்கும் நயினாதீவில் தொழில் நிமித்தம் சென்றிருந்த பூசகர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட தொழில் தகராறே குறித்த கொலையில் முடிந்ததாக தெரியவருகின்றது.
இந்த சம்பவத்தில் நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலய பூசகருகரது வாள் வெட்டிலேயே குறித்த பூசாரி பலியானார் என கூறப்படுகின்றது.


