யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் வெறியாட்டம் , 5 வீடுகள் மீது அடுத்தடுத்து தொடர் தாக்குதல் - 4 பேர் சிக்கினர்..!
ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ஒரு வீடு மற்றும் பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் வெறியாட்டம் , 5 வீடுகள் மீது அடுத்தடுத்து தொடர் தாக்குதல் - 4 பேர் சிக்கினர்..!
யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் காவற்துறைப் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (2026 மார்ச் 11) அதிகாலை ஒரு வன்முறைக் கும்பல் வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ஒரு வீடு மற்றும் பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
அதிகாலை 1 மணியளவில் ஆரம்பமான இந்த வன்முறைச் சம்பவங்களின் போது, ஆத்திரமடைந்த ஊரவர்கள் ஒன்றிணைந்து வன்முறைக் கும்பலைச் சேர்ந்த நால்வரை மடக்கிப் பிடித்து காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
முதலில் மீசாலை மேற்கில் ஒரு வீட்டினுள் அத்துமீறி நுழைந்த கும்பல் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளது.
அங்கிருந்து தப்பிச் சென்ற கும்பல் தட்டான்குளம் பகுதயில் இரண்டு வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்கியுள்ளது. இதில் ஒரு வீடு முற்றாக எரிந்து நாசமானது. வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிளும் தீக்கிரையாயின.
பின்னா் மீசாலை வடக்கில் மற்றுமொரு வீட்டினுள் புகுந்த கும்பல் அங்கிருந்த இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியதுடன், பொருட்களையும் சேதப்படுத்தியது.
ஐந்தாவதாக மற்றுமொரு வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள், ஒரு பட்டா ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன அடித்து நொறுக்கப்பட்டன.
வன்முறைச் சம்பவங்களை அறிந்த ஊரவர்கள் உடனடியாக ஒன்றிணைந்து வன்முறைக் கும்பலைத் துரத்திப் பிடித்தனர். இதன்போது பலர் தப்பிச் சென்ற போதிலும், நால்வர் ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள் , இரண்டு வாள்கள் மற்றும் கொட்டான்கள் என்பன மீட்கப்பட்டு கொடிகாமம் காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


