தேசிய தலைவரின் பெயரை பயன்படுத்தி பிரசார பாடல்: தேசிய மக்கள் சக்திக்கு வலுக்கும் எதிர்ப்பு!
தேர்தல் வோட்டுக்காக கரணம் அடிக்கும் (அ)சிங்களம்!

தமிழீழ தேசியத் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் பெயரை பயன்படுத்தி தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்துள்ள பிரசார நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும் ஒரே மாதிரியானவர்கள் என்று வரிகள் எழுதப்பட்ட பாடல் ஒன்றை தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.
அத்துடன் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் தாய் மற்றும் தந்தையின் பெயரில் துறைமுகங்கள் அமைக்கப்படும் என்றும் அந்த பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இவ்வாறான பிரசார நடவடிக்கைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறையில் தமிழீழ தேசிய தலைவருக்கு வெண்கல சிலை வைப்போம் , இறங்குதுறைக்கு தேசிய தலைவரின் பெற்றோரின் பெயரை வைப்போம் என கடற்றொழில் அமைச்சர் உறுதி அளிப்பாரா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதனை கடற்றொழில் அமைச்சர் ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தட்டும். அதனை விடுத்து, ஆதரவு பாடல் என்ற ஒன்றை வெளியிட்டு மக்களை குழப்பும் செயலில் ஈடுபட வேண்டாம் என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்துள்ள கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தமிழீழ விடுதலை புலிகள் உள்ளிட்ட சகலரும் அமைதியையே விரும்பியதாகவும் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.