சிறையிலிருந்து வெளியே வந்தார் முன்னாள் அதிபர் சர்கோசி!
20 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு இன்று லா சாண்டே சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
சிறையிலிருந்து வெளியே வந்தார் முன்னாள் அதிபர் சர்கோசி! - ஆனால், நிறைய கட்டுப்பாடுகள்!
பிரான்சின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி, 20 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு இன்று லா சாண்டே சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். லிபிய நிதி முறைகேடு வழக்கில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.
தற்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் ஒரு சுதந்திர மனிதராகச் சுற்றித் திரிய முடியாது. நீதிமன்றம் அவர்மீது பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சர்கோசிக்கு விதிக்கப்பட்ட முக்கிய தடைகள்:
1. நாட்டை விட்டு வெளியேறத் தடை: சர்கோசி பிரான்ஸ் நாட்டை விட்டு எங்கும் செல்லக் கூடாது. "முன்னாள் அதிபர் என்ற முறையில், அவர் வெளிநாட்டுத் தலைவர்களுடன் எளிதில் தொடர்பு கொண்டு, வழக்கில் அழுத்தத்தை உருவாக்கக்கூடும்" என நீதிமன்றம் கருதுவதே இதற்குக் காரணம்.
2. முக்கியப் புள்ளிகளைத் தொடர்பு கொள்ளத் தடை: இந்த வழக்கின் மையப்புள்ளிகளாகக் கருதப்படும் பல முக்கிய நபர்களுடன் அவர் எந்த வகையிலும் (தொலைபேசி, சந்திப்பு, செய்திகள்) தொடர்பு கொள்ளக் கூடாது. இந்தத் தடைப் பட்டியல் மிகவும் சுவாரசியமானது:
Claude Guéant: எலிசேயின் முன்னாள் பொதுச் செயலாளர்.
Brice Hortefeux: முன்னாள் உள்துறை அமைச்சர்.
Eric Woerth: சர்கோசியின் 2007 பிரச்சாரத்தின் பொருளாளர்.
Alexandre Djouhri: பிராங்கோ-அல்ஜீரிய தொழிலதிபர், இவர் இந்த நிதிப் பரிமாற்றங்களின் சூத்திரதாரியாகக் கருதப்படுகிறார்.
Saïf al-Islam Gaddafi: லிபியாவின் முன்னாள் தலைவர் மௌம்மர் கடாபியின் மகன்.
3. தற்போதைய நீதித்துறை அமைச்சருக்கே தடையா? அனைத்தையும் விட ஆச்சரியமான கட்டுப்பாடு, சர்கோசி பிரான்சின் தற்போதைய நீதித்துறை அமைச்சர் Gérald Darmanin தொடர்பு கொள்ளக் கூடாது என்பதுதான். சில வாரங்களுக்கு முன்பு, அமைச்சர் டார்மனினே சிறையில் இருந்த சர்கோசியை நேரில் சென்று சந்தித்தது, நீதிபதிகள் மத்தியில் பெரும் சலசலப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. இப்போது நீதிமன்றம், "நீதித்துறையின் எந்த அதிகாரியுடனும் சர்கோசி பேசக் கூடாது" எனத் திட்டவட்டமாகத் தடை விதித்துள்ளது.
இறுதி எச்சரிக்கை
இந்தக் கட்டுப்பாடுகளில் எதையாவது சர்கோசி மீறினால், அவரது ஜாமீன் உடனடியாக ரத்து செய்யப்பட்டு, அவர் மீண்டும் சிறைக்கு அனுப்பப்படுவார் என்று நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.


