தமிழ்தேசியத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற தேர்தல் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!
,

2025 உள்ளுராட்சி சபைகளிற்கான தேர்தல் தமிழ்தேசியத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற தேர்தல் என தனது வாக்கை செலுத்திய பின்னர் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
2025 உள்ளுராட்சி சபைகளிற்கான தேர்தல் வட கிழக்கிலே வாழ்கின்ற தமிழ் மக்களிற்கு ஒரு முக்கியமான தேர்தல்.
எங்களின் அனைத்து தேர்தல் பிரச்சாரங்களிலும் நாங்கள் வலியுறுத்தி வருகின்ற விடயம், தமிழ் தேசியத்தின் எதிர்காலம் தொடர்பாக தீர்மானிக்கின்ற ஒரு தேர்தல்.
அந்த வகையிலே எங்கள் மக்கள் கடந்த ஒன்றரை மாதமாக நடத்தி வருகின்ற பிரச்சார முயற்சிகள் ஊடாக இந்த தேர்தலின் முக்கியத்துவத்தை விளங்கிக்கொண்டு, அனைவரும் கட்டாயம் வாக்குசாவடிகளிற்கு சென்று தங்கள் கடமைகளை செய்ய வேண்டும்.
எங்கள் அமைப்பு கடந்த 2010 ஆண்டு முதல் ஒரு நேர்மையான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றது, கொள்கை என்ற விடயத்தில் நாங்கள் மிகவும் இறுக்கமாக உள்ளோம் அதிலே நாங்கள் எந்த விட்டுக்கொடுப்பினையும் செய்ய தயாராகயில்லை.
கொள்கை என்ற விடயத்தில் இணைவதற்கு தயாராகவுள்ள அனைத்து தரப்பினரையும் அரவணைத்துசெல்வதற்கு தயாராக உள்ளோம் என்பதை நாங்கள் அண்மைக்காலங்களில் நிரூபித்துள்ளோம்.
ஒரு சிலர் அந்த முயற்சியை ஏற்றுக்கொள்ளாமல் இனத்துடைய நலன்கருதி செயற்படாமலிருப்பது மிகவும் கவலைக்குரிய விடயம்.
இந்த தேர்தலிலே சைக்கிள் சின்னத்திற்கு கிடைக்கின்ற ஆணை பலமாகயிருக்கின்ற பட்சத்திலே மற்றவர்களும் தவறிச்செல்கின்ற பாதையிலே இருந்து திரும்பி சரியான பாதைக்கு வருவதற்கு வழிவக்கும். இதன் காரணமாக மக்கள் அதற்கான ஆணையை வழங்கவேண்டும் என்றார்.