Breaking News
மன்னாரில் மக்கள் மீது காவல்துறையினா் கண்மூடித்தனமாக தாக்குதல்- பலர் காயம்!
பெண்கள் மீது கால்களால் மிதித்தும் தடிகளால் அடித்தும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
மன்னாரில் நேற்று(26) வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் காற்றாலைக்கு எதிரான போராட்டம் இடம் பெற்று வரும் நிலையில் காவல்துறையினா் மேற்கொண்டு தாக்குதலில் பெண்கள் ஆண்கள் என பலர் காயமடைந்திருக்கின்றனர்.
மன்னாரில் காற்றாலை மின் செயற்திட்டத்துக்கு எதிராக மக்கள் தொடர்சியாக போராடிவருகின்ற நிலையில் மக்களின் விருப்பத்திற்கு மாறாக காற்றாலைகளை தீவுக்குள் கொண்டு செல்வதற்கான முயற்சி இடம் பெற்றது
இதனையடுத்து காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றி வந்த வாகனங்களை அமைதியான முறையில் தடுக்க முயன்ற மக்கள் மீது காவல்துறையினா் கொடூரமான முறையில் தாக்குதலை மேற்கொண்டுள்ளனா். தாக்குதலில் பலர் காயம் அடைந்தை நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்
மக்களின் விருப்பத்திற்கு எதிராக எந்த ஒரு திட்டத்தையும் செயற்படுத்த மாட்டோம் என தெரிவித்த ஜனாதிபதி கடந்த மாதம் குழு ஒன்றை அமைத்து மக்களின் கருத்துக்களை உள்வாங்கி நல்ல ஒரு தீர்வை வழங்குவதாக தெரிவித்திருந்தார்
இவ்வாறான பின்னனியில் நேற்று முன் தினம் ஜனாதிபதி , மக்களின் எதிர்ப்பை மீறியும் மக்களின் கருத்துக்களை மதிக்காது தொடர்ச்சியாக காற்றாலை செயற்திட்டங்களை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்திருந்தார்
இந்த நிலையில் நேற்றையதினம் (26) இரவு 10 மணியளவில் முதல் கட்டமாக காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றிவந்த வாகனங்களை மக்கள் தடுத்து நிறுத்த முற்பட்ட போது மக்களின் எதிர்ப்பை மீறி காற்றாலை உதிரிபாகங்கள் கொண்டு செல்லப்பட்டது .
அதனை தொடர்ந்து 12 மணியளவில் இரண்டாவது காற்றாலை உதிரிபாகங்கள் கொண்டு செல்லப்பட்ட நிலையில் பொது மக்கள் மற்றும் அருட்தந்தையர்கள் வீதிகளில் இறங்கி தடுக்க முற்பட்ட போது காவல்துறையினா் கொடூரமாக பெண்கள் அருட்தந்தையர்கள் என அனைவர் மீதும் தாக்குதல் மேற்கொண்டு கூட்டத்தை கலைக்க முற்பட்டனர்.
அதே நேரம் போராட்டகாரர்களை தடுப்பதற்காக விசேட அதிரடிப்படையினரையும் பயன்படுத்தி ஆயத முனையில் போராட்டகாரர்களை அச்சுறுத்தி தாக்கி காற்றாலை உதிரிபாகங்களை கொண்டு சென்றுள்ளனர்
குறிப்பாக சில பெண்கள் மீது கால்களால் மிதித்தும் தடிகளால் அடித்தும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர் இவ்வாறான நிலையில் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் சிகிச்சைக்காக மன்னார் பொது வைத்திய சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்


