மக்ரோன் பதவி விலகுவாரா? பிரான்சின் உச்சக்கட்ட அரசியல் பரபரப்பு!
எலிசே மாளிகையின் (Élysée) அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
பிரான்சின் தெருக்கள் முதல் பாராளுமன்றத்தின் தாழ்வாரங்கள் வரை, இப்போது ஒரே ஒரு கேள்விதான் எதிரொலிக்கிறது: அதிபர் இம்மானுவேல் மக்ரோன் பதவி விலகுவாரா? அரசியல் நெருக்கடியின் சூறாவளி அவர் இருக்கையைச் சுற்றிச் சுழன்றாலும், எலிசே மாளிகையின் (Élysée) சுவர்கள் அசைந்து கொடுக்கவில்லை. மக்ரோன் பதவி விலகுவது கிட்டத்தட்ட சாத்தியமில்லை என்றே அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மாறாக, இந்த அரசியல் சதுரங்கத்தில் ஒரு தீர்க்கமான நகர்வை மேற்கொள்ளவே அவர் தயாராகி வருகிறார்.
"மக்ரோன் பதவி விலக வேண்டும்!" என்பது தீவிர இடது சாரிகள் மற்றும் பசுமைவாதிகளின் போர்க்குரல். ஆனால், இது அதிபரின் உண்மையான தோல்வியின் அறிகுறியா அல்லது அவரைச் சிக்கவைக்க விரிக்கப்பட்ட அரசியல் வலையா? என்ற கேள்வி எழுகிறது . "இடது சாரி பிரதமரை நியமியுங்கள், இல்லையேல் வெளியேறுங்கள்" என்று அவர்கள் விடுக்கும் சவால், மக்ரோனைப் பணிய வைக்கும் ஒரு உத்தியே. இது மக்ரோன் பரிசீலிக்கும் ஒரு தேர்வாக இல்லாமல், அவர்மீது செலுத்தப்படும் ஒரு அரசியல் ஆயுதமாகவே உள்ளது.
எதிர்க்கட்சிகளின் புயலுக்கு மத்தியில் மக்ரோன் ஏன் இவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறார்? என்ற கேள்விக்கான பதில், பிரான்சின் ஐந்தாவது குடியரசின் (Cinquième République) சக்திவாய்ந்த அரசியல் சாசனத்தில் உள்ளது. பிரான்ஸ் அதிபர், பாராளுமன்றத்தால் நியமிக்கப்படும் பிரதமர் அல்ல; அவர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்ததற்காக அவர் பதவி விலக வேண்டிய கட்டாயம் இல்லை. 1969-ல் சார்லஸ் டி கோல் பதவி விலகியது ஒரு பொது வாக்கெடுப்பில் (Référendum) தோல்வியடைந்ததன் விளைவு, இன்றைய அரசியல் நெருக்கடியுடன் அதை ஒப்பிட முடியாது. இந்த அரசியல் சாசனமே மக்ரோனின் அசைக்க முடியாத கவசமாக விளங்குகிறது.
இந்த அரசியல் சதுரங்க ஆட்டத்தில் மக்ரோன் ஒரு பார்வையாளர் அல்ல, அவரே ஆட்டத்தை வழிநடத்துபவர். இந்தச் சிக்கலிலிருந்து மீள அவரிடம் இரண்டு சக்திவாய்ந்த தேர்வுகள் உள்ளன:
நெருக்கடியைச் சமாளிக்க, ஒரு புதிய பிரதமரை நியமிப்பது முதல் மற்றும் பாதுகாப்பான வழி. அது தற்போதைய செபஸ்டியன் லெகோர்னுவாக (Sébastien Lecornu) இருக்கலாம் அல்லது அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ஒரு புதிய முகமாகவும் இருக்கலாம். இது புயலைத் தற்காலிகமாகத் திசைதிருப்பும்.
இறுதிப் பிரம்மாஸ்திரம் (பாராளுமன்றக் கலைப்பு): இதுவே அதிபரின் கையில் இருக்கும் உண்மையான சக்தி. அவரால் நிலையான அரசை அமைக்க முடியவில்லை என்றால், அவர் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, "மக்கள் மன்றத்தில் சந்திப்போம்" என்று தேர்தலுக்கு உத்தரவிடலாம்.
பொதுவா கருத்தாக்களின்படி இம்மானுவேல் மக்ரோன் பதவி விலகமாட்டார். அவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த நெருக்கடியைத் தனதாக்கவே முயற்சிப்பார். அடுத்த 48 மணி நேரத்தில், மக்ரோன் தனது அரசியல் சதுரங்கத்தில் எந்தக் காயை நகர்த்துவார் என்பதை பிரான்ஸ் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.


