"சண்டிலிப்பாய் பிரதேச கலாசாரப் பேரவை மற்றும் கலாசார அதிகார சபைகளின் நிர்வாக சபைக்கூட்டம்"
,
"சண்டிலிப்பாய் பிரதேச கலாசாரப் பேரவை மற்றும் கலாசார அதிகார சபைகளின் நிர்வாக சபைக்கூட்டம்"
மாதந்தோறும் இறுதி புதன்கிழமைகளில் நிர்வாக சபைக்கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்ற பொதுச் சபைத்தீர்மானத்துக்கு அமைவாக நேற்றைய தினம் [28] சண்டிலிப்பாய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சண்டிலிப்பாய் பிரதேச கலாசாரப் பேரவை மற்றும் கலாசார அதிகார சபைகளின் தலைவரும் பிரதேச செயலாளருமான குமாரசாமி பிரபாகரமூர்த்தி அவர்களின் தலைமையில் நிர்வாக சபைக் கூட்டம் இடம்பெற்றது.
அக வணக்கத்துடன் ஆரம்பமான கூட்டத்தில் தலைமையுரையாற்றிய பிரதேச செயலாளர் பிரபாகரமூரத்தி அவர்கள் "கடந்த ஆண்டிலே இரண்டு சபைகளும் பல நிகழ்வுகளையும் பெருவிழாக்களையும் நடத்தி பலராலும் மெச்சத்தக்க வகையில் இயங்கி வரும் நிலையில் கடந்த ஆண்டினை விஞ்சத்தக்க வகையில் பண்பாட்டு விழாவினையும் கலை இலக்கிய விழாவினையும் இவ்வாண்டில் கொண்டாட வேண்டுமென்பதே எனது விருப்பமாகும். சண்டிலிப்பாயில் வேறுபாடு நோக்காது, இணைந்து செயற்படுகின்ற உத்தியோகத்தர்களின் செயலூக்கமும் நட்பு ரீதியாக பழகி, கலைப்பணியாற்றுகின்ற கலைஞர்களின் ஈடுபாடும் வேறெங்கும் காண இயலாத சிறப்பியல்புகளாகும்.
அந்தவகையில், பிரதேச மட்டத்தில் எல்லோருக்கும் பயன்தரத்தக்க கலை, இலக்கியச் செயற்பாடுகளுக்கு முன்னுரிமையளித்து, பாரம்பரிய விளையாட்டுக்கள் மற்றும் பண்பாட்டு விழுமியங்களின் சிறப்புக்களை இளையவர்களுக்கு உணர்த்தத்தக்க வகையில் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவது அவசியமாகும்" எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து செயலாளர் அறிக்கை வாசித்தல், பொருளாளர் அறிக்கை சமர்ப்பித்தல் முதலான வழக்கமான கூட்ட நடைமுறைகளைத் தொடர்ந்து அடுத்த மாதம் வெளியிடப்படவுள்ள 'கலாதரம்' (இதழ் 06) நூல் வெளியீட்டு விழா தொடர்பான ஏற்பாடுகள், கலைஞர் உதவித்திட்டம் வழங்கல், கிராம மட்ட செயற்பாடுகள், "பன்னிரண்டு மாத விளக்கு" வேலைத்திட்டம், கலைஞர் சுவதம் செயற்றிட்டம், கலைஞர்களுக்கான மருத்துவ உதவி வழங்கல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
நிறைவாக, சண்டிலிப்பாய் பிரதேச கலாசார அதிகார சபையின் செயலாளர் பூமணி உருத்திரகணேசன் அம்மையாரின் நன்றியுரையுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.


