போதைப்பொருள் என்ற அரக்கனுடன், சில அரசியல் அரக்கர்களும் இணைந்துள்ளனர்!
"பறிப்பவனே கொடுத்து வைத்தாண்டி" - (போதை) அரக்கனே அனன்று செல்!
போதைப்பொருள் என்ற அரக்கனுடன், சில அரசியல் அரக்கர்களும் இணைந்துள்ளனர் என்பது கசப்பான உண்மையாகும். - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்.
“ யாழ்ப்பாணத்திலும் சாபக்கேடான அரசியல் முன்னெடுக்கப்படுகின்றது. அவ்வாறான அரசியலில் இருந்தும் நாம் மீள வேண்டும்.” இவ்வாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
" முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசியச் செயற்பாடு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் வெள்ளிக்கிழமை (16) யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
'அகன்று செல்” என்ற தொனிப்பொருளில், கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு,
“போதைப்பொருளுக்கு எதிராக நாட்டு மக்களை அணிதிரட்டும் செயல்பாடு முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. கொழும்பில் இதற்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கை இம்பெற்றது. 2ஆவது நிகழ்வு அம்பாந்தோட்டையில் நடைபெற்றது.
மூன்றாவது மாநாடு யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெறுகின்றது. போதைப்பொருள் பாவனைக்கு எதிராக கிராமிய மட்டத்தில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு, மக்கள் அணிதிரட்டப்பட்டுவருகின்றனர்.
போதைப்பொருள் பாவனையில் இருந்து எமது இளைஞர்களை மீட்க வேண்டும். இளைஞர்கள் போதைப் பொருள் பிசாசிடம் சிக்காமல் இருப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும்.
போதைப்பொருள் என்ற அரக்கனுடன், சில அரசியல் அரக்கர்களும் இணைந்துள்ளனர் என்பது கசப்பான உண்மையாகும்.
யாழ்ப்பாணத்தை கட்டியெழுப்பும்போது யாழின் மரபுரிமை, கலாசாரம், கௌரவம், அடையாளம் என்பவற்றை பாதுகாத்து அதனை செய்யுமாறு ஜனாதிபதி எனக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதேவேளை, கொழும்பில் “கோட்சூட்” அணிந்து, யாழில் வேட்டியுடன் அரசியல் பேசும் நபர், யாழில் வரவுள்ள சர்வதேச மைதானத்துக்கு எதிராக வழக்கு போடப்போகின்றாராம்.
எமது அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்றன நடவடிக்கைகளுக்கு எதிரானவர்களாக இவர்கள் மாறியுள்ளனர் என்பதை இது வெளிப்படுத்துகின்றது.
தமிழரசுக் கட்சியினர் உட்பட எல்லோருக்கும் நாம் அழைப்பு விடுத்தோம். ஆனால் எவரும் வரவில்லை.
நிகழ்வுக்கு போனால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கிளிநொச்சி அண்ணனுக்கு கோட்சூட் நபர் கூறினாராம். இப்படிதான் சாபக்கேடான அரசியல் யாழ்ப்பாணத்தில் உள்ளது. இந்நிலையில் இருந்து நாம் மீள வேண்டும்.” –என்றார் இராமலிங்கம் சந்திரசேகர்.


