Breaking News
கடும் பதற்றத்தில் இந்தியா - பாகிஸ்தான்.. தமிழ்நாட்டில் நாளை போர் ஒத்திகை!
தமிழகத்தில் கல்பாக்கம், எண்ணூர் அனல் மின் நிலையம், ஆவடி, சென்னை விமான நிலையம் ஆகிய 4 இடங்களில் போர் ஒத்திகை நடைபெறவுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே உச்சக்கட்ட பதற்றம் நிலவி வரும் நிலையில், மத்திய அரசின் உத்தரவின் பேரில் பல்வேறு மாநிலங்கள் நாளை (மே 7) போர் ஒத்திகையில் ஈடுபடவுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை, சென்னை, கல்பாக்கம் உள்ளிட்ட 4 இடங்களில் போர் ஒத்திகை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலும், அதில் 26 பேர் உயிரிழந்ததும் இந்தியாவை கடும் கோபமடையச் செய்துள்ளது. மேலும், இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் லஷ்கர் அமைப்பின் துணை இயக்கம் பொறுப்பேற்றதை அடுத்து, அந்நாட்டின் மீது கடுமையான விதிகளை இந்தியா விதித்து வருகிறது.
பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு, பாகிஸ்தான் பொருட்களின் இறக்குமதிக்கு தடை என பல அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
அதுமட்டுமல்லாமல், இரு நாட்டு எல்லைகளில் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் ராணுவம் இடையே துப்பாக்கிச் சண்டையும் நடந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, பாகிஸ்தான் எல்லையில் இந்தியா ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களையும், ஆயுதத் தளவாடங்களையும் குவித்து வருகிறது.
இதன் காரணமாக, இரு நாடுகள் இடையே போர் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் பயந்து போன பாகிஸ்தான், ஐ.நா.வின் உதவியையும், சீனாவின் ஆதரவையும் நாடி வருகிறது.
போர் ஒத்திகையில் என்னென்ன நடக்கும்? இந்த சூழலில்தான், நாளை போர் ஒத்திகையில் ஈடுபடுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. வான்வெளி தாக்குதல் முன்னெச்சரிக்கை கருவிகளின் செயல்திறனை மதிப்பிடுதல், ராணுவக் கட்டுப்பாட்டு அறைகளின் செயல்திறனை பரிசோதித்தல், நிழல் கட்டுப்பாட்டு அறைகளின் தயார்நிலையை ஆய்வு செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் இந்த போர் ஒத்திகையின் போது மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
எதிரிகள் தாக்குதல் நடத்தினால், பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும்; பொதுமக்களை ராணுவ வீரர்கள் எவ்வாறு பாதுகாக்க வேண்டும்; குடியிருப்பு பகுதிகளில் தாக்குதல் நடத்தினால் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது போன்ற ஒத்திகைகளும், பயிற்சிகளும் இதில் மேற்கொள்ளப்படும் எனக் கூறப்படுகிறது. அதேபோல, போர்க்காலங்களில் இரவில் சைரன் ஒலி எழுப்புவது, எதிரி விமானங்களுக்கு குடியிருப்புகள் தெரியாமல் இருப்பதற்காக மின்தடை செய்வது போன்ற ஒத்திகைகளும் இதில் நடத்தப்படும்.
தமிழகத்தில் போர் ஒத்திகை: நாடு முழுவதும் 244 மாவட்டங்களில் இந்த போர் ஒத்திகை நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை, சென்னை விமான நிலையம், கல்பாக்கம் அணுமின் நிலையம், எண்ணூர் அனல் மின் நிலையம், ஆவடி ஆகிய 4 இடங்களில் இந்த போர் ஒத்திகை நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், அசாம், ராஜஸ்தான், குஜராத், காஷ்மீர் என பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள மாநிலங்களில் பல பகுதிகளில் இந்த போர் ஒத்திகை நடைபெறவுள்ளது.