வெடித்து வளர காத்திருக்கும் இந்தியா உள்ளிட்ட BRICS நாடுகள்.. டிரம்ப்புக்குதான் நன்றி சொல்லணும்!
தற்போது பிரிக்ஸ் நாடுகளின் வளர்ச்சி வேகமடைந்திருப்பதாகவும், விரைவில் இந்த வளர்ச்சி புதிய உச்சத்தை எட்டும் என்றும் ரஷ்யாவின் MGIMO பல்கலைக்கழகத்தின் டீன் தெரிவித்திருக்கிறார்.

முன்னெப்போதையும் விட தற்போது பிரிக்ஸ் நாடுகளின் வளர்ச்சி வேகமடைந்திருப்பதாகவும், விரைவில் இந்த வளர்ச்சி புதிய உச்சத்தை எட்டும் என்றும் ரஷ்யாவின் MGIMO பல்கலைக்கழகத்தின் டீன் தெரிவித்திருக்கிறார். இந்த வளர்ச்சிக்கு டிரம்ப்பின் பொருளாதார நடவடிக்கைகள்தான் காரணம் என்றும் அவர் விவரித்திருக்கிறார்.
அமெரிக்காவின் வரி விதிப்பு நடைமுறை காரணமாக பல நாடுகள் பிரிக்ஸில் இணைய முன் வந்திருக்கின்றன. இதனால் பிரிக்ஸின் வளர்ச்சி வேகமடையும் என்று சொல்லப்படுகிறது.
பொருளாதாரத்தில் உச்சத்தில் இருக்கும் நாடு அமெரிக்கா. உலகம் முழுவதும் பெரும்பாலான வணிகங்கள் டாலரில்தான் நடக்கிறது. அமெரிக்காவின் வளர்ச்சிக்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம். சரி நம்முடைய கரன்சியைதான் உலகமே ஏற்றுக்கொண்டதே என்று இல்லாமல், டிரம்ப் வரி மூலம் கல்லா கட்ட முயற்சித்தார்.
அதாவது ஒவ்வொரு நாடுகளும் அமெரிக்க பொருட்களுக்கு எவ்வளவு வரி விதிக்கிறதோ, அதே அளவுக்கு அமெரிக்காவும் பதில் வரியை விதிக்கும். இது கேட்பதற்கு சரியான நடைமுறைதானே என்று தோன்றலாம். ஆனால் அது அப்படி அல்ல. இடஒதுக்கீட்டை ஒழித்துவிட்டால் சாதி ஒழிந்துவிடும் என்று சொல்வது போன்றுதான் டிரம்ப்பின் கணக்கு இருக்கிறது.
இந்த உதாரணத்தை பாருங்கள். இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு மாம்பழம் அனுப்புகிறோம். அதற்கு அவர்கள் 10% வரியை போடுகிறார்கள். ஆனால் அமெரிக்காவிலிருந்து ஹார்லி டேவிட்சன் பைக்கை இறக்குமதி செய்கிறோம். இதற்கு நாம் 80% வரை வரியை போடுகிறோம். இந்த வரியால் ஹார்லி பைக் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் என்பது உண்மைதான். ஆனால் இந்த பைக்குகளை விற்றுதான் அமெரிக்கா பிழைக்க வேண்டும் என்பதில்லை. சொல்லப்போனால் இந்த பைக் விற்பனையில் வரும் லாபம் அமெரிக்காவுக்கு ஒரு பொருட்டே கிடையாது.
ஆனால் நமக்கு அப்படி இல்லை. மாம்பழ விற்பனை மூலம் நமக்கு டாலர்கள் கிடைக்கும். இதனால் இந்தியாவின் அந்நிய செலாவணி பாதுகாப்பான அளவில் இருக்கும். இப்போது சொல்லுங்கள் இரு நாடுகளும் ஒரே மாதிரியான வரியை போடுவது சிறந்ததா? அல்லது வளரும் நாடுகளுக்கு மட்டும் கூடுதல் வரி சிறந்ததா என்று.
யதார்த்தமாக பார்த்தால் இந்தியா கூடுதல் வரியும், அமெரிக்கா குறைவான வரியும் போடுவதுதான் சரியானது. ஆனால் டிரம்ப் இதை ஏற்றுக்கொள்ளாமல் இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகின் பல நாடுகளுக்கும் கூடுதல் வரியை போட்டிருக்கிறார். இதனால் ஆசிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. வரி தற்போது 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் 90 நாட்களுக்கு பிறகு? சூழல் இன்னும் மோசமாகலாம்.
இந்த நெருக்கடி காரணமாக ஆசிய நாடுகள் பல பிரிக்ஸ் அமைப்பில் இணைந்துள்ளன. எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகள் புதியதாக இணைந்திருக்கின்றன. இந்த நாடுகள் தங்கள் சொந்த கரன்சியில் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள முயன்றுள்ளன. அதாவது இந்தியா இந்தோனேசியாவிடமிருந்து நிலக்கரியை வாங்க விரும்பினால் அதற்கான தொகையை டாலரில் இல்லாமல் ரூபாயில் கொடுக்க விரும்புகிறது.
இதனால் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் தடையில்லாமல் சீராக இருக்கும். இது அனைத்து நாடுகளுக்கும் சாத்தியமானால் பிரிக்ஸின் வளர்ச்சி புதிய உச்சத்தை எட்டும் என்று MGIMO பல்கலைக்கழகத்தின் டீன் ஈகேட்டெரினா அராபோவா, வால்தாய் கிளப் எனும் ஆய்வரங்களில் பேசும்போது கூறியிருக்கிறார். இவர் பிரபலமான பொருளாதார அறிஞராக அறியப்படுகிறார். பிரிக்ஸ் நாடுகள் வளர்ச்சி பற்றி பல்வேறு கணிப்புகள் வெளி வந்திருக்கின்றன. இதற்கிடையில் இவரது பேச்சு சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.