கனடிய பொதுத் தேர்தலில் மூன்று தமிழர்கள் வெற்றி; மூவர் தோல்வி!
Liberal கட்சியின் சார்பில் போட்டியிட்ட மூன்று தமிழர்களும் வெற்றி பெற்றனர்.

2025 கனடிய பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஆறு தமிழ் வேட்பாளர்களில் மூவர் வெற்றி பெற்றுள்ளனர். கனடிய பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு திங்கட்கிழமை (28) நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் Liberal கட்சியின் சார்பில் மூன்று, Conservative கட்சியின் சார்பில் இரண்டு, பசுமை கட்சியின் சார்பில் ஒன்று என மொத்தம் ஆறு தமிழர்கள் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.
மூவர் வெற்றி - மூவர் தோல்வி!
இவர்களில் Liberal கட்சியின் சார்பில் போட்டியிட்ட மூன்று தமிழர்களும் வெற்றி பெற்றனர். Oakville கிழக்கு தொகுதியில் அனிதா ஆனந்த், Scarborough-Guildwood-Rouge Park தொகுதியில் ஹரி ஆனந்தசங்கரி, Pickering–Brooklin தொகுதியில் ஜுனிதா நாதன் ஆகியோர் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.
இதுவரை வெளியான உத்தியோகபற்றற்ற முடிவுகளின் அடிப்படையில் அனிதா ஆனந்த் 28,498 (50.4%) வாக்குகளையும், ஹரி ஆனந்தசங்கரி 33,164 (63.9%) வாக்குகளையும்,, ஜுனிதா நாதன் 24,951 (53.2%) வாக்குகளையும் பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.
இந்தத் தேர்தலில் அதிக ஆசனங்களை வெற்றி பெற்று Liberal கட்சி சிறுபான்மை ஆட்சி அமைத்துள்ள நிலையில் மீண்டும் அனிதா ஆனந்த், ஹரி ஆனந்தசங்கரி ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தேர்தலில் Conservative கட்சியின் சார்பில் Markham-Stouffville தொகுதியில் போட்டியிட்ட நிரான் ஜெயநேசன், Markham -Thornhill தொகுதியில் போட்டியிட்ட லியோனல் லோகநாதன், பசுமை கட்சியின் சார்பில் Etobicoke வடக்கு தொகுதியில் போட்டியிட்ட சருன் பாலரஞ்சன் ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர்.
தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றிபெற்றது லிபரல் கட்சி!
கனடா தேர்தலில் மைக்கார்னியின் லிபரல் கட்சி வெற்றிபெற்றுள்ளது லிபரல் கட்சி 144 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது .
21 இடங்களில் முன்னனியில் உள்ளது என சிபிசி தெரிவித்துள்ளது. கென்சவேர்ட்டிவ் கட்சி 121 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
26 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது. லிபரல் கட்சிக்கு 43 வீத வாக்குகளும் கென்சவேர்ட்டிவ் கட்சிக்கு 41 .7 வீத வாக்குகளும் கிடைத்துள்ளதாக சிபிசி தெரிவித்துள்ளது.