பேரிடரில் பாதிக்கப்பட்ட மலையக மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் - கிருஷ்ணன் கலைச்செல்வி
பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் மீளக் குடியமர்த்துவதே எமது அரசாங்கத்தின் நோக்கம்.
இயற்கைக்கு எதிராக நாம் செயற்பட்டால் அது என்றாவது ஒருநாள் அதன் பிரதிபலனை மீண்டும் எமக்குப் பெற்றுத் தரும் என்ற சிறந்த பாடத்தை இடம்பெற்ற அனர்த்தம் நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் புகட்டியுள்ளது. எனவே அதிகம் பாதிக்கப்பட்ட மலையக மக்களை பாதுகாப்பான இடங்களில் மீண்டும் குடியமர்த்துவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆளும் தரப்பினரால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
வழமையாக இயற்கை அனர்த்தங்கள் இடம்பெறும் போது தனித்தனியே ஒவ்வொருவரும் அதற்கான பங்களிப்புகளை வழங்கி வருவர்.ஆனால் இம்முறை அரசாங்கம்,அமைச்சர்கள், அரச அதிகாரிகள், பொது அமைப்புகள் என அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டதாலேயே இயற்கை அனர்த்தம் ஏற்பட்டு 23 தினங்களுக்குள் நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடிந்தது.
இயற்கை அனர்த்தங்களினால் மலையக பிரதேசங்களில் வாழும் மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 200 வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட வீடுகளில் வாழ்ந்த மக்கள் மற்றும் மலை பிரதேசங்களில் வாழ்ந்த மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்தும் இடம் பெற்ற பின்னர் இன்றும் கூட அந்த மக்கள் தமக்கு இயற்கை அனர்த்தங்கள் மூலம் பாதிப்பு ஏற்படும் என்ற பயத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். பெருமளவு மக்கள் இன்னும் நலன்புரி நிலையங்களிலேயே வாழ்கின்றனர்.
எவ்வாறெனினும் இம்முறை இடம் பெற்றுள்ள இயற்கை அனர்த்தங்கள் நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் ஒரு சிறந்த பாடத்தை புகட்டியுள்ளது. அதாவது இயற்கைக்கு எதிராக நாம் செயற்பட்டால் இயற்கையானது என்றாவது ஒருநாள் அதன் விளைவுகளை, பிரதிபலனை மீண்டும் எமக்குப் பெற்றுத் தரும் என்பதாகும்.
அனர்த்தத்தில் நுவரெலியா மாவட்டத்தில் பல வீதிகள் பல குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகள் பெரும் சேதமடைந்துள்ளன.கொத்மலை, வலப்பனை,ஹங்குரங்கெத்த போன்ற பிரதேசங்களே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரதேசங்களில் மக்கள் வீடுகளையும் இழந்து பெருமளவு உயிர்களையும் இழந்துள்ள நிலையையே காண முடிகிறது.
பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் மீளக் குடியமர்த்துவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும். அதற்கான உறுதி மொழியை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அந்த மக்களுக்கு வழங்கி யுள்ளார்.
இந்த இயற்கை அனர்த்தத்தின் போது எமது அரசாங்கம் மற்றும் ஜனாதிபதியின் மீதும் நம்பிக்கை வைத்து பெருமளவிலான நாடுகள் எமக்கு உதவி, ஒத்துழைப்புகளை வழங்கின.பல்வேறு நாடுகளும் எமக்கு உதவிகளை வழங்கின. சில தோட்டங்களில் தொழிலாளர்களும் தமது ஒருநாள் சம்பளத்தை வழங்க முன் வந்தனர். ஆனால் அந்த நிவாரணங்கள் உரிய வகையில் மக்கள் கைகளுக்கு போய் சென்றுள்ளதா என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டியுள்ளது என்றார்.


