பிள்ளையான் கைது விவகாரத்தில் சர்ச்சை ; தடுமாறும் அரசாங்கம்!
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் பிள்ளையானுக்கு தொடர்பு இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் கைது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைக்காக பிள்ளையான் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தரப்பில் உடனடியாக அறிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் பிள்ளையானுக்கு தொடர்பு இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார். இந்த நிலையில் 90 நாட்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பிள்ளையானிடம் விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது. இந்த நிலையில், பிள்ளையானின் சட்டத்தரணியாக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில பிள்ளையானைச் சந்தித்து 30 நிமிடங்கள் வரையில் உரையாடியிருந்தார். இந்தச் சந்திப்பையடுத்து உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்துடன் பிள்ளையானை தொடர்புபடுத்த முயற்சிக்கப்படுவதாக உதயகம்மன்பில குற்றம் சாட்டியிருந்தார்.
விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய தனக்கு இந்த நிலை ஏற்பட்டு விட்டதே என்று பிள்ளையான் கண்ணீர்மல்க தன்னிடம் தெரிவித்ததாகவும் அவர் வெளிப்படுத்தியிருந்தார். இத்தகைய வெளிப்படுத்தலானது பிள்ளையான் கைது தொடர்பில் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க பிள்ளையானுடன் தொலைபேசியில் உரையாடுவதற்கு முயன்றதாகவும் அதற்கு தாம் அனுமதி அளிக்கவில்லை என்றும் அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்த விடயத்தை தெரிவித்திருந்தமை பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியிருந்தது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏன் பிள்ளையானுடன் தொலைபேசியில் உரையாட முயன்றார்? அதற்கான காரணம் என்ன? என்றெல்லாம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனாலும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிள்ளையானுடன் உரையாட முற்பட்டதாக தெரிவிக்கப்படும் கருத்து தவறானது என்று ஐக்கிய தேசியக் கட்சி தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிள்ளையானின் கைதுக்கான காரணம் என்ன? என்பது குறித்தும் அதன் பின்னணி தொடர்பிலும் குற்றப்புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரிடம் கேட்டறியுமாறு தனது பாதுகாப்பு அதிகாரியிடம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரியிருந்தார். இதற்கிணங்கவே ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரிகள் சி.ஐ.டி. பணிப்பாளரிடம் கலந்துரையாடினர். ஆனால், இந்த விடயத்தை அரசாங்கம் கதையை மாற்றி கூறி விட்டது என்று ஐக்கிய தேசியக் கட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 17ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கு தேநீர் விருந்துபசாரம் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்றுள்ளது. இதன்போதே ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் தலதா அத்துகோரள, தவிசாளர் வஜிர அபேவர்தன ஆகியோர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
‘பிள்ளையானைக் கைது செய்துள்ள அரசாங்கம் தற்போது உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் பிள்ளையானை தொடர்பு படுத்துவதா இல்லையா என்ற விடயத்தில் தடுமாறி வருவதாகவே தெரிகின்றது. ஆரம்பத்தில் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் தொடர்பு என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறியிருந்தார். தற்போது உபவேந்தர் ரவீந்திரநாத் கடத்தல் தொடர்பிலேயே பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க கருத்து தெரிவித்திருக்கின்றார். இதிலிருந்து அரசாங்கம் தடுமாறுவது தெரிகின்றது’ என்று எதிரணியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
அதிருப்தியில் சீனா
அரசாங்கத்திற்குள் கொள்கை ரீதியாக ஏற்பட்டுள்ள மாற்றங்களினால் உள்வீட்டு கருத்து முரண்பாடுகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி இந்த இரண்டுக்கும் இடையிலான முறுகல் நிலை குறித்து ஆரம்பத்திலிருந்தே தகவல்கள் வெளியாகின. பிரதமர் மோடியின் விஜயத்தின் பின்னர் அரசாங்கத்திற்குள் இந்த கொள்கை ரீதியான மோதல்கள் சற்று தீவிரமடைந்து வருவதாக கூறப்படுகின்றது.
இதேவேளை சீனாவுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மனக்கசப்புகள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது. ஒப்பந்த பணம் செலுத்தாமை, இந்திய – இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம் போன்ற விடயங்களை முன்னிலைப்படுத்தியே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சீன தூதுவர் சந்தித்து இந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
ஜே.வி.பி.யின் கொள்கையில் குழப்பம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது பரவலாக அனைத்து விடயங்களும் ஊடகங்ளுக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தன. ஆனால், பிரதமர் மோடியின் வருகையுடன் அரசாங்கத்திற்குள் சில மாற்றகள் ஏற்பட்டுள்ளதை உணர முடிகிறது. அதாவது, அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளே இதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளனவாம். இதற்கு முன்னரும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகள் தொடர்பில் குறிப்பிட்டிருந்தோம்.
தேசிய மக்கள் சக்தியாக கூட்டணியமைத்த பின்னர் இதுவரை காலமும் பாதுகாத்து வந்த இடதுசாரி கொள்கைகளில் இருந்து மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மெதுவாக விலகியுள்ளமையை காண முடிகிறது. இருப்பினும் ஜே.வி.பியின் அடுத்த தலைவராக எதிர்பார்க்கப்படுகின்ற அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஜே.வி.பி. கொள்கைகளை தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து செயல்பட்டு வருகின்றார்.
இதனடிப்படையில் இந்தியா குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் நிலைப்பாடு முந்தைய ஜே.வி.பி.யின் கொள்கையுடன் ஒத்திசைவாக இருப்பதை அண்மைய யாழ். விஜயத்தின் போது அவர் தெரிவித்த கருத்துக்களில் இருந்து வெளிப்பட்டிருந்தது. அதேபோன்று தான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் இருந்த சந்தர்ப்பங்களில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க உட்பட குறிப்பிட்ட சிலர் இந்திய தரப்புகளுடனான சந்திப்புகளில் பங்கேற்றிருக்கவில்லை.
சீன தூதுவர் – ஜனாதிபதி சந்திப்பு
இவ்வாறானதொரு நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்திற்கு முன்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் சீன தூதுவர் கீ சென்ஹொங் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது இருநாட்டு உறவுகள் மற்றும் உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்த திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. சீன நிறுவனங்களினால் இலங்கையில் ஏற்கனவே முன்னெடுக்கப்படுகின்ற திட்டங்களுக்கான ஒப்பந்த கொடுப்பனவுகள் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக செலுத்தப்படாமல் இருந்துள்ளன.
கடந்த ஆட்சியின் போது குறிப்பிட்ட தொகை நிதி பகுதியளவில் குறித்த சீன நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இருப்பினும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் திட்டங்களை முன்னெடுப்பதில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இந்த விடயத்தை சுட்டிக்காட்டி கொடுப்பனவுகளை செலுத்துமாறு அரசாங்கத்திடம் சீன தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், குறித்த திட்டங்கள் ஊடாக உள்நாட்டில் சிலர் பெரும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். எனவே அது குறித்து தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த மோசடிகள் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெறுகின்றமையினால் இந்த சந்தர்ப்பத்தில் நிதி வழங்குவது கடினம் என அரசாங்கம் சீனத் தரப்புக்கு பதிலளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை சற்றும் எதிர்பார்க்காத சீனா, நிதி வழங்கப்படாவிடின், உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய முதலீட்டு திட்டங்களை முன்னெடுப்பதில் நெருக்கடியான நிலைமை ஏற்படலாம் என தெரிவித்துள்ளது.
சீனாவின் கடும் அதிருப்தி
இவ்வாறு அரசாங்கத்தின் தீர்மானங்கள் குறித்து சீனா அதிருப்தியில் உள்ள நிலையில், இந்தியாவுடன் இலங்கை மேற்கொண்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம், ஆய்வுக்கப்பல்களின் வருகைக்கு பாதகமாக அமையுமா என்பது குறித்தும் சீனா அவதானம் செலுத்தியுள்ளது. ஏனெனில் ரணில் விக்கிரமசிங்க விதித்திருந்த தடை காலாவதியாகியுள்ள நிலையில், ஆய்வுக்கப்பலுக்கான அனுமதி குறித்து இலங்கை எவ்விதமான தீர்மானத்தையும் அறிவிக்கவில்லை. அதேபோன்று இந்தியா தனது தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி தொடர்ந்தும் சீன ஆய்வுக்கப்பல்களின் வருகையை எதிர்த்தால் தற்போதைய அரசாங்கம் எத்தகைய நடவடிக்கையை எடுக்கும் என்ற அச்சம் பெய்ஜிங்கிற்கு உள்ளது.
ஆரம்பத்திலிருந்து ஒரு நம்பகரமான நிலைமை ஜனாதிபதி அநுரவின் அரசாங்கம் மீது சீனாவுக்கு உள்ளதா என்றால் அது சந்தேகம் தான். எனவே சீன ஆய்வுக்கப்பல் விவகாரம் அரசாங்கத்திற்கு தலையிடியாகவே இருக்கும்.
சஜித்துக்கு நன்றி கூறிய ஜனாதிபதி
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்திய பிரதமர் நரேந்தி மோடிக்கு இராப்போசன விருந்தினை வழங்கியிருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இந்த விருந்துபசார நிகழ்வில் பங்கேற்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் பிரதமர் மோடிக்காக வழங்கப்பட்ட விருந்துபசாரத்தில் சஜித் பிரேமதாசவும் பங்கேற்றிருந்தார். ஆனால் சஜித் பிரேமதாசவின் புகைப்படங்கள் எதனையும் வெளியிடாமல் இருக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இருப்பினும் நிகழ்வின் இறுதி வரை ஜனாதிபதி மாளிகையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இருந்துள்ளார். இறுதியில் ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் ஆகியோர் சஜித் பிரேமதாசவுடன் சம்பாஷணையில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குமாறும், ஆடை உற்பத்தி தொழிற்துறையில் ஏற்படக்கூடிய நெருக்கடிகளின் போது ஏற்றுமதி அளவை அதிகரித்து ஒத்துழைக்குமாறும் பிரதமர் மோடியிடம் தான் கேட்டுக்கொண்டதாக ஜனாதிபதியிடம் சஜித் இதன் போது குறிப்பிட்டார். இதற்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
நாளை திங்கட்கிழமை 21 ஆம் திகதியுடன் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 6 ஆண்டுகள் ஆகின்றன. இதனை மையப்படுத்தி பேராயர் இல்லம் விசேட ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தை நோக்கி பாத யாத்திரை மற்றும் விசேட ஆராதனைகள் இடம்பெறவுள்ளன. கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் விசேட அறிவிப்பு ஒன்றும் இடம்பெறவுள்ளது. அதே போன்று அன்றைய தினம் பிற்பகல் 4 மணிக்கு கட்டுவாப்பிட்டி தேவாலயத்திற்கு முன்பதாக ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய சூத்திரதாரிகளை அறிவிக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தயாராகி வருவதாக அரசாங்க தகவல்கள் குறிப்பிடுகின்றன.
ஏனெனில் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சூத்திரதாரிகள் குறித்த தகவல்களை வெளியிடுவதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தது. ஆட்சி பீடம் ஏறி 6 மாதங்கள் கடந்தும் அரசாங்கத்தின் மௌனம் பேராயர் இல்லத்தின் விமர்சனத்திற்கு காரணமாகியுள்ளது. அத்துடன் மே மாதம் 6 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் அரசாங்கத்தின் வெளிப்படுத்தல் குறித்து அனைத்து தரப்புகளும் அவதானத்துடன் உள்ளன.
தேர்தல் ஆணைக்குழுவின் எச்சரிக்கை கடிதம்
தேர்தல் சட்டங்களை மீறும் அரசியல் அறிக்கைகள் வெளியிடப்படுவதை தவிர்க்கு மாறு, இலங்கை தேர்தல் ஆணைக்குழு, ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதம் அனுப்பவுள்ளது. அதிகாரம் இல்லாத உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி வழங்கப் படமாட்டாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசியல் மேடைகளில் தெரிவித்திருப்பது, தேர்தல் சட்டங்களை திட்டவட்டமாக மீறுவதாகவே கண்காணிப்பு அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.
குறிப்பாக, உள்ளூராட்சி தேர்தல் சட்டத்தின் பிரிவு 82சீ (முறையற்ற செல்வாக்கு ஏற்படுத்துதல்) மற்றும் 82டீ (அதிகபட்ச நன்மை தரும் வாக்குறுதிகள் மற்றும் பரிசுகள்) ஆகியவை இதன்மூலம் தெளிவாக மீறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டுகின்றன. ஜனாதிபதி ஒரு சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் அல்ல என்றும், நிதி ஒதுக்கீடு தொடர்பான முடிவுகளில் அவருக்கே இறுதியான அதிகாரம் இருப்பதால், இத்தகைய அறிக்கைகள் தேர்தலின் நியாயத்தையும் நாட்டின் நலன்களையும் பாதிக்கக்கூடியவை என கண்காணிப்பு அமைப்புகள் எச்சரிக்கின்றன. இவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதால், இலங்கை அரசியலமைப்பின் 35 (1) பிரிவின் கீழ், ஜனாதிபதிக்கு எதிரான எந்தவொரு சிவில் அல்லது குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது. எனவே, தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிப்பை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு மாநகர சபை விவகாரத்தில் ஐ.ம.ச.வுக்குள் அதிருப்தி
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெற வுள்ள நிலையில் பிரசார நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்குள் பல்வேறு முரண்பாடுகள் தலைதூக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு மாநகர சபைத் தேர்தல் விவகாரத்தில் பல்வேறு உள்ளக முரண்பாடுகளை ஐக்கிய மக்கள் சக்தி சந்தித்து வருகின்றது. கொழும்பு மாநகர சபைக்கான கட்சியின் மேயர் வேட்பாளர் தெரிவில் சில தரப்பினர் அதிருப்தி கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக முதலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்னவை நியமிப்பதற்கு கட்சியின் தலைமை திட்டமிட்டிருந்தது. ஆனால், அந்த நியமனத்தை ஏற்பதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டார்.
இந்நிலையில் மேயர் வேட்பாளராக முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் கொழும்பு வடக்கு அமைப்பாளருமான சி.வை.பி. ராமை நியமிக்கலாம் என்று சிலர் பரிந்துரைத்திருந்தனர். ஆனாலும் கட்சித் தலைமை அதற்கான நடவடிக்கையினை எடுத்திருக்கவில்லை. இந்தப் பின்னணியில்தான் மேயர் வேட்பாளராக டாக்டர் ருபைஸ் ஹனிபாவை நியமிப்பதற்கு கட்சித் தலைமை தீர்மானித்திருந்தது. இந்த நியமனம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் அதிருப்திகளை தெரிவித்திருக்கின்றனர். இந்த அதிருப்தி நிலையானது தேர்தல் பிரசார நடவடிக்கைகளிலும் தாக்கத்தை செலுத்தியுள்ளதாக விடயமறிந்த வட்டாரங் கள் தெரிவிக்கின்றன.
வெறுப்படைந்துள்ள தலதா
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளராக பதவி வகித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள வெறுப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஒற்றுமையைக் கட்டியெழுப்பி ஐக்கிய மக்கள் சக்தியுடனும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் நோக்குடன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளராக தலதா அத்துகோரள பதவியேற்றிருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தனக்கு பூரண ஒத்துழைப்பு கிடைக்கும் என அவர் எதிர்பார்த்திருந்தார். ஆனால், அத்தகைய ஒத்துழைப்பு கிடைக்காமையும் ஐக்கிய மக்கள் சக்தியினருடன் ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சி தோல்வியடைந்தமையும் அவர் வெறுப்படைப்படைந்துள்ளமைக்கு காரணம் என கூறப்படுகிறது.
தற்போது உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அந்தத் தேர்தலை சந்திப்பதற்கு கட்சி மட்டத்தில் பூரண ஒத்துழைப்புக்கள் கிடைக்கவில்லை என்று அவர் கருதுவதாகத் தெரிகின்றது. இதன் காரணமாக தேர்தல் முடிவடைந்த பின்னர் உறுதியான முடிவுவொன்றை எடுக்கும் எண்ணத்தில் தலதா அத்துகோரள இருப்பதாகவே தெரிகின்றது.
தலதா வழிபாட்டுக்கு அணிதிரண்ட இராஜதந்திரிகள்
16 வருடங்களுக்குப் பின்னர் ஸ்ரீ தலதா வழிபாடு நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புனித தந்த தாதுவை தரிசிப்பதற்கு சந்தர்ப்பம் அளிக்கும் வகையில் இந்த வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆரம்ப நிகழ்வில் பங்கேற்பதற்காக கொழும்பிலிருந்து விசேட ரயிலில் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். இதில் பிரித்தானியா, கனடா, இந்தியா உட்பட ஐரோப்பிய நாடு களின் தூதுவர்களும் பங்கேற்றிருந்தனர். வெள்ளை ஆடைகள் அணிந்து தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் இந்த நிகழ்வில் பக்தி பூர்வமாக கலந்து கொண்டிருந்தனர். இவர்களுக்கான வசதிகளை வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.