எனக்கு துணை முதலமைச்சர் பதவி! தவெகவுடன் கூட்டணியா? திருமாவளவன் சொன்ன பளிச் பதில்!
அதிமுகவின் கதவை மூடியதை போல, விஜய் திறந்து வைத்திருந்த தவெக கூட்டணிக் கதவையும் மூடிவிட்டேன்!

ஆட்சி அதிகாரத்தில் பங்கு, துணை முதலமைச்சர் பதவி என்று ஆசை வார்த்தைகளைக் கூறி தன்னை வீழ்த்தி விட முடியாது எனவும்; கூட்டணி தர்மத்திற்காக, அதிமுகவின் கதவை மூடியதை போல, விஜய் திறந்து வைத்திருந்த தவெக கூட்டணிக் கதவையும் மூடிவிட்டேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியை அடுத்த திருபுவனையில் புதிதாக அமைக்கப்பட்ட அம்பேத்கரின் முழு திருவுருவ சிலை திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விசிக தலைவர் திருமாவளவன், சிலையைத் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றியவர்களுக்கு விருதுகள் மற்றும் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
தவெக கதவை மூடிவிட்டேன்:
அப்போது நிகழ்ச்சி மேடையில் அவர் பேசியதாவது: புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், என்னை புத்தக வெளியீட்டு விழாவிற்கு வரும்படி அழைப்பு விடுத்தார். அந்த சமயத்தில், அது ஒரு தவறான யூகத்தைக் கொடுத்து விடக்கூடாது, குழப்பத்தை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதையெல்லாம் யூகித்து, அந்த விழாவையே புறக்கணித்தேன்.
எனக்காக திறந்து வைக்கப்பட்டிருந்த அதிமுகவின் கதவை மூடியதை போன்று, விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவையும் மூடி விட்டேன். ஆட்சியில் பங்கு, துணை முதலமைச்சர் பதவி என்ற ஆசை வார்த்தைகளால் என்னை யாராலும் வீழ்த்தி விட முடியாது. அரசியலில் தான் எடுக்கிற முடிவு ஒவ்வொன்றும், அம்பேத்கரின் கருத்துக்களை மனதில் வைத்துக் கொண்டு தான் எடுப்பேன்.
மக்களுக்காகப் போராடாத கட்சி பாஜக:
கிராமங்கள் தோறும் அம்பேத்கர் சிலைகள் அமைப்பதை விட, அவர் பெயரில் ஒரு படிப்பகத்தை கட்டி எழுப்ப வேண்டும். அதுதான் அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யக்கூடிய பெரும் செயல். மாணவர்களுக்கு படிக்கின்ற பழக்கத்தை உருவாக்க வேண்டும், படிப்பது என்பது ஒரு கலை. 40 ஆண்டுகளுக்கு முன்பு, வெறும் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சியாக பாஜக இருந்தது. சாதி ஒழிப்பு, சகோதரத்துவம், சமத்துவம், இட ஒதுக்கீட்டை வெளிப்படையாக ஆதரிக்காத கட்சி ஒன்று, இந்தியாவில் உண்டு என்றால், அது பாஜக மட்டும்தான்.
என்றைக்காவது பாஜக சாதி ஒழிக என்று சொன்னதுண்டா? பெண்களுக்கான சமத்துவத்தை, பெண்களுக்கான உரிமைகளை முன்னிறுத்தி உயர்த்திப் பேசியதுண்டா? சாதி வழக்கத்தை எதிர்த்து, ஆர்எஸ்எஸ் இயக்கம் என்றைக்காவது போராடியது உண்டா?ஆனால், விசிகவோ, தமிழ்நாட்டில் நடைபெற்ற வேங்கை வயல், கள்ளக்குறிச்சி, மேல்பாதி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில், திமுக அரசின் தமிழ்நாடு காவல்துறையை கண்டித்துப் பல போராட்டங்களை நடத்தியது.
பாஜக, பாமக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது:
திமுகவோடு தொடர்ந்து நாம் பயணிக்கிறோம் என்பதையே பலர் கேலியாகப் பேசுகிறார்கள். ஆனால், மற்றவர்களை போல கூட்டணிக்காக எல்லா கதவுகளையும் நாம் திறந்து வைத்திருக்கவில்லை. ஒரு கூட்டணியில் இருந்து கொண்டே, மற்ற கட்சிகளுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் ராஜதந்திரம் எனக்கு தெரியாது. பாஜகவும், பாமகவும் இருக்கும் அணியில் ஒருபோதும் விசிக இடம்பெறாது. இவ்வாறு திருமாவளவன் பேசினார்.