பொருளாதாரத் தடையிலிருந்து புத்தகத் தடை வரை: தமிழ் இனத்தின் மீதான தொடரும் அடக்குமுறைகளை நிறுத்து - கிளிநொச்சி ஊடக அமையம்.
யுத்த காலத்தில் தமிழ் மக்கள் மீது பொருளாதாரத் தடை, மருந்துத் தடை, விவசாயத் தடை என வாழ்வாதாரத்தின் மீது தாக்குதல் நடத்திய பேரினவாத அரசு, யுத்தம் முடிவடைந்த பின்னரும் தடைகளைத் தொடர்ந்த வண்ணமே உள்ளது.
இலங்கையில் சிறுபான்மை தமிழ் மக்கள் மீது முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான அடக்குமுறைகளின் ஒரு அங்கமாக, தற்போது தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் மற்றும் நூல்கள் மீது இலங்கை அரசு விதித்து வரும் தடைகளை கிளிநொச்சி ஊடக அமையம் வன்மையாகக் கண்டிக்கிறது. இது மிக மோசமான ஜனநாயக மறுப்பு மாத்திரமன்றி, தமிழ் இனத்தின் சிந்தனைச் சுதந்திரத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள பண்பாட்டு யுத்தமாகும் என கிளிநொச்சி ஊடக அமையம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்த காலத்தில் தமிழ் மக்கள் மீது பொருளாதாரத் தடை, மருந்துத் தடை, விவசாயத் தடை என வாழ்வாதாரத்தின் மீது தாக்குதல் நடத்திய பேரினவாத அரசு, யுத்தம் முடிவடைந்த பின்னரும் தடைகளைத் தொடர்ந்த வண்ணமே உள்ளது. தமிழ் மக்கள் தமது இறந்த உறவுகளை நினைவுகூரத்தடை, ஜனநாயக ரீதியாகப் போராடத் தடை, சொந்த நிலங்களில் வாழ்வதற்குத் தடை என நீண்டு செல்லும் இந்த வரிசையில், இப்போது தமிழ் எழுத்தாளர்களின் 'எழுத்துச் சுதந்திரமும்' நசுக்கப்படுகின்றது.
கிளிநொச்சி எழுத்தாளர் தீபச்செல்வனின் பயங்கரவாதி, சயனைட் 'எழுத்தால் நான் யுத்தம் செய்கின்றேன்' நூல்கள் தடுத்து வைக்கப்பட்டன, பின்னர் பயங்கரவாதி, சயனைட் நூல்கள் விடுவிக்கப்பட்டு எழுத்தால் நான் யுத்தம் செய்கின்றேன்' நூல் இன்றுவரை சுங்கப் பிரிவினால் விடுவிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், எழுத்தாளர் சோபாசக்தியின் 'லைடன்தீவு-மண்டைதீவு படுகொலைகளும் புதைகுழிகளும்', பி. இரயாகரனின் 'அரசியல் அநாதைகள்', ம. மதிவண்ணனின் 'நெரிந்து', டிலுக்சன் மோகனின் 'படுபட்சி' உள்ளிட்ட மிக முக்கியமான நூல்கள் அரசினால் தடுத்து வைக்கப்பட்டிருப்பது தமிழ் மக்களின் வரலாற்றுப் பதிவுகளை அழிக்கும் முயற்சியாகும்.
எழுத்துச் சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் உயிர்நாடி: சர்வதேச ரீதியில் கருத்துச் சுதந்திரம் மற்றும் பேச்சுச் சுதந்திரம் குறித்துப் பேசுகின்ற இலங்கை அரசு, உள்நாட்டில் தமிழ் எழுத்தாளர்களின் பேனா முனைகளை முறிக்க முயல்வது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். வரலாற்றின் வலிகளைப் பதிவு செய்வதும், சமூகத்தின் அவலங்களை எழுதுவதும் ஒரு எழுத்தாளனின் கடமையாகும். அத்தகைய படைப்புகளைப் 'பயங்கரவாதம்' என்ற முலாம் பூசித் தடுப்பது, ஒரு இனத்தின் ஆன்மாவைச் சிதைப்பதற்குச் சமமானது.எனத் தெரிவித்துள்ள கிளிநொச்சி ஊடக அமையம்
தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் நூல்களையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும்.
தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அச்சமின்றித் தமது கருத்துகளைப் பதிவு செய்வதற்கான சூழலை அரசு உறுதிப்படுத்த வேண்டும். ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடக மற்றும் எழுத்துச் சுதந்திரத்தை நசுக்கும் செயற்பாடுகளை அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.எனவும் கோரிக்கை விடுத்துள்ளதோடு
எந்தவொரு அடக்குமுறைச் சட்டங்களாலும் உண்மையை மறைத்துவிட முடியாது. பேனா முனைகளை முறிப்பதன் மூலம் வரலாற்றைத் துடைத்துவிட முடியாது என்பதை அரசுக்கு வலியுறுத்திக் கூறுகிறோம். தமிழ் எழுத்தாளர்களின் உரிமைக்காகவும், கருத்துச் சுதந்திரத்திற்காகவும் கிளிநொச்சி ஊடக அமையம் என்றும் முன்னிற்கும் குரல் கொடுக்கும் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


