இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு விரைவாக தீர்வுகள் வழங்கப்படும்!
,

இலங்கை கடல் பரப்புக்குள் சட்டவிரோதமாக இந்திய மீனவர்கள் நுழைவதைத் தடுக்க தேவையான நவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அமைச்சரின் தலைமையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற போதே இவ்வாறு கூறினார். அதற்கமைய, இலங்கை மீனவர்களை பாதித்துள்ள இந்த பிரச்சினைக்கு முரண்பாட்டு வழியில்லாமல் உடனடியாக தீர்வுகள் வழங்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர், இது தொடர்பில் தமிழகத்துடனும், இந்திய உயர்ஸ்தானிகருடனும் அவசியமான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
சதொச வர்த்தக நிலையங்கள் ஊடாக மீன்களை விற்பனை செய்ய நடவடிக்கை!
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது சதொச வலையமைப்பு மூலம் மீன்களை விற்பனை செய்வதற்காக, கடற்றொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்களுக்கிடையில் கூட்டுத் திட்டமொன்றை ஆரம்பிப்பது தொடர்பில் விரிவான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
இங்கு உரையாற்றிய வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க,
எதிர்காலத்தில் சதொச வர்த்தக நிலையங்களை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், சதொச வர்த்தக நிலையங்கள் ஊடாக மீன்களை விற்பனை செய்யத் தேவையான நடவடிக்கையை விரைவாக எடுக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் நுகர்வோர் எளிதாக சமைக்கும் வகையில், மீன் வகைகளை பொதி செய்து வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.