பலதும் பத்தும். 02.11.2025 - ஐரோப்பாவுக்கு செல்ல முயன்ற கிளிநொச்சி இளைஞன் பெலாரஸில் உயிரிழப்பு!
கிறிஸ்தவர்களை கொலை செய்தால் இதுதான் நடக்கும் ; நைஜீரியாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!
எதிர்வரும் 7ஆம் திகதியுடன் நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை - மீண்டும் டிசம்பர் 8 ஆம் திகதி ஆரம்பமாகும்!
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையை (G.C.E A/L Exam) முன்னிட்டு எதிர்வரும் 7ஆம் திகதியுடன் நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.
க.பொ.த உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் நாளை மறுதினம் (4) நள்ளிரவு 12 மணி முதல் உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்குகள், செயலமர்வுகள், மேலதிக வகுப்புக்கள் மற்றும் தனியார் வகுப்புக்கள் உள்ளிட்ட அனைத்தும் பரீட்சைகள் நிறைவடையும் வரை தடை செய்யப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகும் பரீட்சைகள் டிசம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் டிசம்பர் 8 ஆம் திகதி பாடசாலைகளில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் மீள ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு (Ministry of Education) தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பில் 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சோதனைகளில் இருந்து 1 கிலோகிராம் 202 கிராம் ஐஸ், 863 கிராம் 137 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் குஷ் உள்ளிட்ட பல போதைப்பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 31 பேருக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.
அவர்களில் நான்கு பேருக்கு எதிராக சட்டவிரோத சொத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்களாக அடையாளம் காணப்பட்ட 8 நபர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
1 போத்தல் தண்ணீருக்காக 5 இலட்சம் அபராதம்!
நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, அதிக விலைக்குப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை விற்பனை செய்தமை, மற்றும் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தாதமை போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட நுகர்வோர் சேவைகள் அதிகாரசபை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பை அடுத்தே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து நுவரெலியா நீதவான் புத்திக தர்மதாச முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது 100 ரூபாய் மதிப்புள்ள 1 லீற்றர் குடிநீர்ப் போத்தலை ரூ.140ற்கு விற்பனை செய்த நபருக்கு எதிராக ரூ5 இலட்சம் (500,000) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசியை விற்பனை செய்த 2 வர்த்தகர்களுக்கு தலா ரூபாய் 1 இலட்சம் (100,000) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக் கப்பல்!
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலான AKEBONO தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, இன்று (2025 அக்டோபர் 31) தீவை விட்டுப் புறப்பட்டது.
கொழும்பு துறைமுகத்தில் இலங்கை கடற்படையினரால் இந்தக் கப்பலுக்கு பாரம்பரிய கடற்படை முறைப்படி பிரியாவிடை வழங்கப்பட்டது.
இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, AKEBONO இன் கட்டளை அதிகாரி கமாண்டர் ARAI Katsutomo மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜகத் குமார ஆகியோருக்கு இடையே கப்பலில் ஒரு உத்தியோகபூர்வ சந்திப்பு நடைபெற்றதுடன் AKEBONO தீவில் தங்கியிருந்த காலத்தில், இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே நல்லெண்ணத்தை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்த கிரிக்கெட் போட்டியிலும், கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்திலும் கப்பலின் குழுவினர் பங்கேற்றனர்.
மேலும், தீவின் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடுவதில் கப்பலின் பணியாளர்களும் பங்கேற்றதுடன், மேலும் இலங்கை கடற்படை வீரர்களுக்கும் கப்பலின் செயல்பாட்டு நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
கிறிஸ்தவர்களை கொலை செய்தால் இதுதான் நடக்கும் ; நைஜீரியாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!
நைஜீரியா நாட்டில் கிறிஸ்தவ மக்கள் அதிக அளவில் வாழ்கின்றனர். அந்நாட்டில் அடிக்கடி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் ஏராளமான கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில், நைஜீரியா அரசுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கிறிஸ்தவர்களை கொன்று குவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறினால், உதவிகள் நிறுத்தப்பட்டு ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இஸ்லாமிய பயங்கரவாதிகள் அழிக்கப்படுவார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
ஐரோப்பாவுக்கு செல்ல முயன்ற கிளிநொச்சி இளைஞன் பெலாரஸில் உயிரிழப்பு!
சட்டவிரோதமாக ஐரோப்பாவுக்கு செல்ல முயன்ற கிளிநொச்சி – உருத்திரபுரத்தை சேர்ந்த இளைஞன் பெலா ரஸ் எல்லையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
உருத்திரபுரத்தைச் சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தரான குறித்த இளைஞன் ஆட்கடத் தல் காரர்கள் மூலம் சட்டவி ரோதமாக வெளிநாடு சென்ற நிலையில், நேற்றுமுன்தினம் பெலாரஸ் எல்லையில் அந் நாட்டு இராணுவத்தினரால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இதன்போது அவருடன் இருந்த மற்றுமொரு இலங் கையரும் சுட்டுக் கொல்லப் பட்டதாக அந் நாட்டு தகவல் கள் தெரிவித்துள்ளன.
குறித்த இருவரும் பெலாரஸ் நாட்டின் எல்லைப் பகுதியில் உள்ள அடர்காட்டுப் பகுதியில் விலங்குகள் நுழையும் பகு திக்குள்ளால் மற்றுமொரு நாட்டுக்குள் நுழைய முயற்சி த்த நிலையில் பெலார ஸ் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
யாழ். பொதுசன நூலகத்தை பார்வையிட்ட தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் இளம் தலைவர்கள்!
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அழைப்பின் பேரில் வருகைதந்த தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் இளம் தலைவர்கள் இன்றையதினம் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தை பார்வையிட்டனர்.
14 அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 24 பேர் கொண்ட இளம் அரசியல் தலைவர்கள் குழு இந்தியாவிற்கு விஜயம் செய்ததன் தொடர்ச்சியாக வடக்கு மாகாண விஜயம் மேற்கொண்டனர்.
இவ் விஜயத்தின் போது வடக்கு மாகண மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் கள விஜயங்கள் மேற்கொள்ளும் நோக்கத்துடன் வருகைதந்த குறித்த குழுவினர்,
நேற்றையதினம் யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை வரை புகையிரதத்தில் பயணித்து காங்கேசன்துறை துறைமுகம், மயிலிட்டி மீன்பிடித்துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலையம் ஆகியவற்றுக்குச் சென்று அங்குள்ள அபிவிருத்தி நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்தனர்.
கொழும்பிலிருந்து மும்பைக்கு போதைப்பொருள் – ஐவர் கைது – பலகோடி சிக்கியது!
இந்தியாவின் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் 47 கோடி இந்திய ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து மும்பைக்கு சென்ற விமானத்தில் போதைப் பொருள் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பில் இந்திய மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து மும்பைக்கு வரும் விமானத்தில் கொகைன் போதைப்பொருள் கடத்தப்படுவதாக இரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், மும்பையின் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் சென்றடைந்த ஒரு பெண் பயணியின் உடமைகளை பரிசோதித்தனர்.
இதன்போது 09 தேயிலை தூள் பக்கெற்றுகளில் மறைத்து வைத்திருந்த கொகைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.
சுமார் 4.7 கிலோ நிறையுடன் அதன் மதிப்பு 47 கோடி ரூபா ஆகும்.
கொகைன் கடத்தி சென்ற பெண், அதை வாங்கிச் செல்ல சென்ற ஒருவர் உட்பட 5 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அவர்கள் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
சர்வதேச போதை கடத்தல் கும்பல், அண்மை காலமாக போதைப்பொருளை கடத்த இந்திய பெண்களை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, இதனைக் கண்டறிவதைத் தடுக்க உணவுப் பொருட்களுக்குள் வைத்து கடத்துகின்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


