கனேடியவாழ் ஈழத்தமிழர்களின் ஒற்றைக்குரல் என்று சொல்லும் NCCT க்கு ஏன் இந்த விரோத மனப்போக்கு?
பெரும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் கனேடியவாழ் ஈழத்தமிழர்கள்.
தமிழீழத் தேசியக் கொடியிலுள்ள புலிச்சின்னத்தை அழித்தும் மறைத்தும் செயற்படும் NCCT யினர்!
பெரும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் கனேடியவாழ் ஈழத்தமிழ் உணர்வாளர்கள்.
வழமைபோல் இந்த வருடமும் தமிழினவழிப்பு நாள் (மே 18) நிகழ்வில் NCCTயினர் தேசிய அடையாளங்களை நீக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என்பது எல்லோரும் அறிந்ததே. இதன் ஒரு கட்டமாக நிகழ்வில் பின்வரும் கொடும் நிகழ்வுகள் நடந்தேறின.
(1)ஈழத்தமிழருக்கு உரிய அகவணக்கத்திலிருக்கும் “இந்தியப் படைகளால் (கொல்லப்பட்ட)” என்பதை மாற்றி “இயற்கை அனர்த்தத்தால் இறந்த” என்று மடைமாற்றியிருந்தார்கள்.
(2)தமிழீழத் தேசியக்கொடிப் பாடலை “தமிழீழத் தேசியக் கொடி ஏற்றாமால்” தனியே இசைக்க செய்து தமிழீழத் தேசியக் கொடியை அவமதித்துள்ளார்கள்.
(3)தமிழீழத் தேசியக் கொடி ஏற்ற மறுத்தனர். இந்த “தமிழீழத் தேசியக் கொடிப் புறக்கணிப்பு” அமைச்சர் விஜய் தணிகாசலத்திற்காக நடந்ததாக மக்கள் விசனமடைந்துள்ளார்கள். விஜய் பங்குபெறும் நிகழ்வுகளில் எமது தேசியக் கொடி ஏற்றப்படக்கூடாது என்பது விஜய் தரப்பினதும் NCCTயினரதும் கண்டிப்பான உத்தரவு.
இவ்வாறான ஈழத்தமிழர் விரோத நடவடிக்கைகளை செய்து கொண்டு ஒரு படி மேலாக சென்று, அந்த நிகழ்வில் தமிழீழத் தேசியக் கொடிகளுடன் பங்குபற்றிய மக்களின் நிழற்ப்படங்களில் உள்ள புலிக் கொடிகள் கணினியின் உதவியுடன் (editing) அழிக்கப்பட்டு “தமிழீழத் தேசியக்கொடிக்கு” பதிலாக “வெறும் சிவப்பு கொடிகள்” போடப்பட்டு தமது (NCCT) உத்தியபூர்வ சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர்.
தமிழீழத் தேசியத்தால் உருவாக்கப்பட்டு பல வளங்களை தம்முள் வைத்திருந்து தம்மை கனேடியவாழ் ஈழத்தமிழர்களின் ஒற்றைக்குரல் என்று சொல்லும் NCCT அமைப்பிற்கு ஏன் இந்த ஈழத்தமிழர் விரோத மனப்போக்கு? இந்த கீழ்த்தரமான செயலுக்கு மக்கள் தமது கண்டனங்களையும் வருத்தங்களையும் பதிவு செய்வதோடு உடனடியாக NCCTயினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற குரல்களும் வலுப்பெறுகின்றன.
“தேசியக்கொடிக்கு வழங்கப்படுகின்ற மதிப்பு, சிறப்பு என்பன அந்த நாட்டைச் சென்றடைவது போன்று, தேசியக்கொடிக்கு ஏற்படுத்தப்படும் இழிவு, புறக்கணிப்பு என்பனவும் அதன் நாட்டையே சென்றடையும். எனவேதான் தேசியக்கொடிக்கு ஏற்படுத்தப்படும் இழிவு பெருங்குற்றமாகக் கருதப்பட்டு அக்குற்றத்துக்கு மிகுதியான ஒறுப்பு (தண்டனை) வழங்கப்படுகின்றது.” தேசியக்கொடி பயன்பாட்டு விதிக்கோவை, அரசியற்துறை, தமிழீழ விடுதலைப்புலிகள் (வெளியீடு மார்ச் 1994) என்னும் விதிக்கோவையில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டள்ளது.


