முதல்நாள் இரவிலேயே கைதிகளிடமிருந்து மிரட்டல்! காணொளி வெளியாகியது - 3 பேர் அதிரடி கைது.
சர்கோசி சிறையில் அடைக்கப்பட்ட முதல் நாள் இரவே "கொலை மிரட்டல்" !
சிறைக்குச் சென்ற சர்கோசி... முதல்நாள் இரவிலேயே கைதிகளிடமிருந்து மிரட்டல்! காணொளி வெளியாகியது - 3 பேர் அதிரடி கைது.
பிரான்சின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி, லிபிய நிதி முறைகேடு வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று, நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) பாரிஸில் உள்ள புகழ்பெற்ற 'லா சாண்டே' சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால், அவர் சிறைக்குச் சென்ற முதல் இரவே பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் அரங்கேறியுள்ளது.
சர்கோசி சிறையில் அடைக்கப்பட்ட முதல் நாள் இரவே, சக கைதிகள் சிலர் அவருக்கு எதிராகக் கூச்சலிடுவதும், கடுமையான மிரட்டல்களை விடுப்பதும் போன்ற ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. இந்த வீடியோ, சிறைக்கு உள்ளேயே ஒரு கைதியால் திறன்பேசி மூலம் படம்பிடிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காணொளிவெளியானதைத் தொடர்ந்து, சிறை நிர்வாகமும், பாரிஸ் காவல்துறையும் உடனடியாக நடவடிக்கையில் இறங்கின. இந்தச் சம்பவம் தொடர்பாக "கொலை மிரட்டல்" விடுத்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை தொடங்கப்பட்டது .
காணொளியில் இடம்பெற்ற மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த மூன்று கைதிகள் உடனடியாககாவல்துறை காவலில் (garde à vue) வைக்கப்பட்டனர். சம்பந்தப்பட்ட கைதிகளின் அறையில் சிறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, சிறையில் தடைசெய்யப்பட்ட இரண்டு திறன்பேசிகள் (மொபைல் போன்கள்) பறிமுதல் செய்யப்பட்டன.
ஒரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி, சிறைக்குச் சென்ற முதல் நாளிலேயே சக கைதிகளால் மிரட்டப்பட்ட சம்பவம், பிரான்ஸ் அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்கோசியின் கடும் அரசியல் போட்டியாளராகக் கருதப்படும் மரின் லு பென் (Marine Le Pen), இந்த வீடியோவை X தளத்தில் பகிர்ந்து தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அவர் குறிப்பிடுகையில், "இந்தச் சூழலைக் கண்டு சிலர் மகிழ்ச்சி அடையலாம். ஆனால், என்னைப் போலவே கோடிக்கணக்கான பிரான்ஸ் மக்களும் இதைக் கண்டு 'அருவருப்பு' (dégoût) அடைந்திருப்பார்கள் என்றே நான் நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸ் அவர்களும், சிறையில் சர்கோசியின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். லிபிய வழக்கில் சர்கோசி மேல்முறையீடு செய்துள்ள நிலையில், சிறையில் அவரது பாதுகாப்பு தற்போது பெரிய கேள்விக் குறியாகியுள்ளது.


