கடலில் மூழ்கிய சிறுமி.. காப்பாற்ற சென்ற ஆட்டோ ஓட்டுநர்.. கரை ஒதுங்கிய உடல்கள்!
தூத்துக்குடி கடலில் குளித்துக் கொண்டிருந்த சிறுமி ஆழத்தில் மூழ்கிய நிலையில் அவரை காப்பாற்ற சென்ற ஆட்டோ டிரைவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடியில் கடலில் மூழ்கிய சிறுமி மற்றும் அவரை காப்பாற்ற முயன்ற ஆட்டோ ஓட்டுநர் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்து கரை ஒதுங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி, தாளமுத்து நகர் அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் விஜயன் (40). மீனவரான இவர் தற்போது ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
இந்நிலையில், நேற்று (மே 5) திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, கடலில் குளிப்பதற்காக தாளமுத்து நகர் மொட்டை கோபுரம் கடற்கரை பகுதிக்கு விஜயன் தனது ஆட்டோவில் சென்றுள்ளார். அவருடன் சுனாமி நகரைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள சிறுவர்கள், சிறுமிகள் என மொத்தம் 7 பேர் சென்றுள்ளனர்.
அப்போது கடலில் குளித்துக் கொண்டு இருந்த தாளமுத்துநகரை அடுத்த நேரு நகரைச் சேர்ந்த முருகன் மகள் காளீஸ்வரி (16) நீச்சல் தெரியாததால், பகுதிக்கு சென்று மூழ்கி உள்ளார். இதனை அவருடன் சென்ற காளீஸ்வரியின் தம்பி மற்றும் சிறார்கள் உள்ளிட்ட 5 பேர் கரையில் நின்று பார்த்து அபாய குரல் எழுப்பியுள்ளனர். பின்னர், ஆட்டோ டிரைவர் விஜயனும் சிறுமியை காப்பாற்ற கடலின் ஆழத்துக்கு சென்றபோது அவரும் மூழ்கியுள்ளார்.
தகவலறிந்து வந்த தீயணைப்புப்படையினர், மீனவர்கள், உள்ளூர் மக்கள் இணைந்து கடலில் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சிறுமி காளீஸ்வரி உடல் கடலில் மிதந்த நிலையில் வெள்ளப்பட்டி கடற்கரை ஓரமாக நேற்று மாலை கரை ஒதுங்கியது. ஆட்டோ டிரைவர் விஜயன் உடலை தேடும் பணி நேற்று இரவிலும் இன்று காலையிலும் தொடர்ந்து நடைபெற்ற நிலையில், காலை 9.35 மணியளவில் மொட்டை கோபுரம் வெள்ளப்பட்டி இடையே கடலில் விஜயன் உடல் மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட இருவரது உடல், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தருவை குளம் கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மொட்டை கோபுரம் கடற்கரை பகுதிக்கு குளிக்க சென்ற சிறுமி கடலின் ஆழத்தில் மூழ்கிய நிலையில் அவரை காப்பாற்ற முற்பட்ட ஆட்டோ டிரைவரும் சேர்ந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.