ஈழத்தமிழர் பிரச்சினைக்கான ஒற்றைத்தீர்வை உடனடியாக யாராலும் முன்வைக்க இயலாது - அது ஓர் தொடர் முயற்சி என்கிறது பா.ஜ.க
,

இந்திய - ஈழத்தமிழர் உறவானது இயற்கையாகவே உணர்வு ரீதியாக, வரலாற்று ரீதியாக, கலாசார ரீதியாகப் பிணைந்திருக்கின்றது. நீண்டகாலமாக நிலவிவரும் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு உடனடியாக ஓர் ஒற்றைத்தீர்வை யாராலும் முன்வைக்கமுடியாது. மாறாக இப்பிரச்சினைக்கான தீர்வு என்பது ஒரு தொடர்ச்சியான முயற்சியாகும் என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிரணி தலைவியும், தமிழக சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரித்தானிய தமிழர் பேரவையினால் கடந்த வாரம் பிரித்தானியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தைப்பொங்கல் நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
இந்திய - ஈழத்தமிழர் உறவானது இயற்கையாகவே உணர்வு ரீதியாக, வரலாற்று ரீதியாக, கலாசார ரீதியாகப் பிணைந்திருக்கின்றது. சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவிவரும் ஈழத்தமிழர் பிரச்சினையானது பல்வேறு பரிமாணங்கள், பல்வேறு வடிவங்களில் மாற்றமடைந்துகொண்டிருக்கக்கூடிய சூழலில் இந்தியாவை ஆட்சி செய்யும் கட்சியின் பிரதிநிதியாகவும், சட்டமன்ற உறுப்பினர் என்ற ரீதியிலும் நீண்டகாலப் பிரச்சனைக்கான ஓர் ஒற்றைத் தீர்வை யாராலும் முன்வைக்க முடியாது.
ஆனால் இப்பிரச்சினைக்கான தீர்வு என்பது ஒரு தொடர்ச்சியான முயற்சியாகும். அதனை முன்னிறுத்தி பிரித்தானிய தமிழர் பேரவை 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிவருகிறது. அதேவேளை உலகளாவிய ரீதியில் பல்வேறு நாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் ஒரு மாபெரும் சக்தியாக உருவாகி செயற்பட்டு வருகின்றார்கள். இந்தியாவில் வாழும் இலங்கை மக்கள் தங்களை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் இணைத்துக்கொண்டு வாழ்கிறார்கள்.
இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து உங்களுக்கு தெரியும். பாரதிய ஜனதா கட்சி உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயகக் கட்சியாக வளர்ந்து வருகிறது. இவ்வாறானதொரு பின்னணியில் இந்தியா தனது அண்டை நாடுகளுடன் உறவைப் பேணுவதென்பதும் அந்தந்த நாடுகளின் வெளியுறவுக்கொள்கைகளுடன் பொருத்திப் பார்ப்பதென்பதும் முக்கியமானதாகும். ஒரு நாடானது பல்வேறு விதமான இராஜதந்திர உத்திகளுடன் தான் இயங்கும்.
2014 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அரசின் உயரதிகாரிகளைச் சந்தித்து பேசியதுடன் நின்று விடாது, யாழ்ப்பாணம் சென்று அங்குள்ள தமிழர்களுடன் தைப்பொங்கல் விழாவைக் கொண்டாடினார் என்ற செய்தி, "யாழ்ப்பாண மக்களுடன் நிற்கிறேன், அவர்களுக்கென்று இருக்கின்ற அந்த நீண்டகால கோரிக்கையை நான் இலங்கை மண்ணிலே உங்கள் முன் வைக்கிறேன்" என்ற அவரது நிலைப்பாட்டைக் காண்பித்தது.
பொருந்தோட்டத்தொழிலாளர்களுக்கான விழாவை இந்திய அரசு நடத்தியது. இந்திய அரசு "அனைவருக்கும் வீடு" என்னும் திட்டத்தை இந்தியாவில் செயற்படுத்துவதுடன் மாத்திரமன்றி, இலங்கையிலும் அதனைச் செயற்படுத்தியது எனச் சுட்டிக்காட்டினார்.