அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று முதல் நாடளாவிய ரீதியில் கடுமையான போராட்டம்!
26 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டத்தின் அடுத்த கட்டமாக, நோயாளர் சேவைகளைப் பாதிக்கும் வகையிலான பல கடுமையான தீர்மானங்களை சங்கம் மேற்கொண்டுள்ளது.
சுகாதார அமைச்சினால் தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாததைக் கண்டித்து, அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (02) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் தனது தொழிற்சங்க நடவடிக்கையைத் தீவிரப்படுத்தவுள்ளது.
கடந்த 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டத்தின் அடுத்த கட்டமாக, நோயாளர் சேவைகளைப் பாதிக்கும் வகையிலான பல கடுமையான தீர்மானங்களை சங்கம் மேற்கொண்டுள்ளது.
இன்று முதல் பின்வரும் சேவைகளில் இருந்து வைத்தியர்கள் விலகியிருக்க தீர்மானித்துள்ளனர்.
வைத்தியசாலைகளில் கையிருப்பில் இல்லாத மருந்துகள் மற்றும் உபகரணங்களை வெளியில் இருந்து பெற்றுக்கொள்ளுமாறு நோயாளர்களுக்குப் பரிந்துரைக்கும் துண்டுகளை (Chits) வழங்குவது நிறுத்தப்படும்.
அரச வைத்தியசாலைகளில் வசதியில்லாத பரிசோதனைகளை வெளியில் செய்துகொள்ளுமாறு நோயாளர்களை அறிவுறுத்துவது தவிர்க்கப்படும்.
அரசியல் குழுக்களினால் ஏற்பாடு செய்யப்படும் சுகாதார முகாம்கள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் வைத்தியர்கள் தன்னார்வப் பங்கேற்பைத் தவிப்பார்கள்.
போதிய வைத்தியர்கள் இன்றி அவசர அவசரமாகத் திறக்கப்படும் புதிய நோயாளர் விடுதிகள் மற்றும் பிரிவுகளுக்குச் செல்ல வைத்தியர்கள் மறுப்புத் தெரிவிப்பார்கள்.
நிபுணத்துவ வைத்தியர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட வைத்தியசாலைகளில் மட்டுமே பணியாற்றுவார்கள். வைத்தியர்கள் பற்றாக்குறை உள்ள ஏனைய வைத்தியசாலைகளுக்குச் சென்று மேலதிக கடமைகளை ஆற்றுவதிலிருந்து அவர்கள் விலகியிருப்பார்கள்.
நோயாளர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வசதிகள் இல்லாத சூழலில் நோயாளர்களைப் பரிசோதிப்பதிலிருந்து வைத்தியர்கள் தவிப்பார்கள்.
தமது கோரிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சருக்கு 48 மணிநேர அவகாசம் வழங்கப்பட்ட போதிலும், அமைச்சின் தரப்பில் இருந்து எந்தவொரு சாதகமான பதிலும் கிடைக்கவில்லை என சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இதனையடுத்து, கடந்த 31 ஆம் திகதி கூடிய நிறைவேற்று குழு கூட்டத்தில் இந்தத் தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளதாக GMOA தெரிவித்துள்ளது. இதனால் இன்று முதல் வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கக் கூடிய சூழல் உருவாகியுள்ளது.


