அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்ததொடர்பில் சிறப்பு விசாரணை!
.

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சிறப்பு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் (ஊடகப் பேச்சாளர்) காமினி பி. திசாநாயக்க. தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிறுவன மட்டத்தில் நிலை 1 சிறைக் காவலரின் கீழ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், மேலதிக விசாரணைக்காக வீரவில சிறைச்சாலையின் உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இதற்கிடையில், அங்குணுகொலபெலஸ்ஸ பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சிறைச்சாலை வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது தாக்கப்பட்ட பின்னர் இந்தக் கைதி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த கைதி சிறையில் புதிய கைதிகளுக்கான விடுதியில் அடைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அவரது இடையூறு விளைவிக்கும் நடத்தை காரணமாக, மருத்துவ ஆலோசனையின் பேரில் அவர் சிறைச்சாலை வைத்தியசாலையிலுள்ள ஒரு விடுதியில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அவர் சிறைச்சாலை அதிகாரிகளால் சிறைச்சாலை மருத்துவரிடம் ஒப்படைக்கப்பட்டு, மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அங்குணுகொலபெலஸ்ஸ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பெற்று வந்த போதே குறித்த கைதி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் எம்பிலிப்பிட்டிய, நியூ டவுன் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் அவர் சிறையில் அடைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தடயவியல் மருத்துவர் வழங்கிய அறிக்கையின்படி, மரணத்திற்கான காரணம் தாக்குதல் எனக் கூறப்படுகிறது.