பலதும் பத்தும். 03.11.2025 - ஐசெம்மணி புதைகுழிக்குள் வெள்ளம்!!
முச்சக்கரவண்டியை கழுவ களனி கங்கையில் நீர் அள்ளும் போது தவறி விழுந்த 19 வயது இளம் பெண் நீரில் மூழ்கி பலி!
செம்மணி புதைகுழிக்குள் வெள்ளம்!
செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்வதற்காக யாழ்.நீதவான் நீதமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார், சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் , சட்டத்தரணிகளான நிரஞ்சன், ஞா.ரஜித்தா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
அதன் போது புதைகுழிக்குள் மழைநீர் தேங்கி நிற்பதனால் அடுத்த அகழ்வு பணிகளை மேற்கொள்வது தொடர்பில் எதிர்வரும் ஜனவரி மாதம் 19ஆம் திகதி மீண்டும் அகழாய்வு தளத்திற்கு பயணம் மேற்கொண்டு, அடுத்த கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராயப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகம் திறப்பு!
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைமைச் செயலகம் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை இராமநாதன் வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அக்கட்சியின் செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டது.
கட்சியின் பெயர்ப் பலகையை யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் திரைநீக்கம் செய்து வைத்தார். குறித்த நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலர் கொண்டனர்.
கடந்த 2018ம் ஆண்டு தமிழ் மக்கள் கூட்டணி எனும் அரசியல் கட்சி வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் க.வி.விக்னேஸ்வரனால் ஆரம்பிக்கப்பட்டு அரசியல் சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நல்லூரில் பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்த திருடன்
நல்லூரில் பெண்ணின் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடிய திருடன்; நாவற்குழியில் மடக்கிப்பிடித்து பொலிஸிடம் ஒப்படைத்த மக்கள்!
நல்லூரில் பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்த திருடன் நாவற்குழியில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கபட்டார்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் நல்லூர் கோயில் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.
நல்லூர் கோயில் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் பணியாற்றும் பெண்ணின் சங்கிலியே இவ்வாறு திருடப்பட்டது.
நல்லூர் கோவில் வீதியிலுள்ள வர்த்தக நிலையத்திற்கு பொருட்களை கொள்வனவு செய்து போல் வருகை தந்த நபரொருவர் அங்கு பணியாற்றிய பெண்ணின் தங்கச சங்கிலியை நேற்றுமுன்தினம் (01) அறுத்துச் சென்றுள்ளார்.
அத்தோடு,மோட்டார் சைக்கிள் ஒன்றையும் ஆசிரியர் ஒருவரிடமிருந்து பறித்துக்கொண்டு தப்பிச் சென்றிருந்தார்.
இதனையடுத்து வர்த்தக நிலையத்திலிருந்த CCTV கமரா ஊடாக குறித்த நபரை இனங்கண்ட நாவற்குழி மக்கள் சந்தேகநபரை பிடித்து சாவகச்சேரி பொலிஸாரிடம் நேற்று ஒப்படைத்தனர். இதன்போது சந்தேக நபரிடமிருந்த 3 இலட்சம் ரூபா பணமும் மீட்க்கப்பட்டுள்ளது.
குறித்த குற்றச் செயல்கள் யாழ்.பொலிஸ் நிலைய பகுதிக்குள் இடம்பெற்றறிருந்ததால், சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த சந்தேக நபர் பல்வேறு குற்றச் செயல்களோடு தொடர்புடையவர் எனவும், சிறைத் தண்டனை பெற்று ஒருவாரத்துக்கு முன்னரே விடுதலையானவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
விமானப்படை மேம்பாட்டில் உக்ரைன் தீவிரம் ; பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை!
உக்ரைன் தனது விமானப்படையை மேம்படுத்தும் முயற்சியில் பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் பிரான்ஸ் முக்கிய பங்காற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியதன்படி, அமெரிக்கா, ஸ்வீடன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று
இந்நாடுகள் உக்ரைனின் எதிர்கால விமானப்படையின் முக்கிய ஆதாரமாக இருக்கும் F-16, Gripen, மற்றும் Rafale போர் விமானங்களை வழங்கும் வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் அரசின் மதிப்பீட்டின்படி, நாட்டின் விமானப்படையை முழுமையாக மீட்டெடுக்க சுமார் 250 போர் விமானங்கள் தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரான்ஸ் தனது Dassault Aviation நிறுவனத்தின் மூலம் ரஃபேல் போர் விமானங்களை வழங்கத் தயாராக இருப்பதாக பிரான்ஸ் நாட்டின் Le Journal du Dimanche செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன், Dassault நிறுவனம் உக்ரைன் அதிகாரிகளுடன் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
பல்நோக்கு திறன், மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகள், மற்றும் நவீன ஆயுத அமைப்புகளுடன் கூடிய ரஃபேல் விமானங்கள், உக்ரைனின் பாதுகாப்புத்திறனை உயர்த்தும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்டுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 10 உயிரிழந்துள்ளதாகவும் 260 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதுபற்றி ஆப்கானிஸ்தான் நாட்டின் தலீபான் பாதுகாப்பு அமைச்சு கூறும்போது, பால்க் மற்றும் சமங்கன் மாகாணங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால், எண்ணற்றோர் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது என தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து, இராணுவத்தின் மீட்பு மற்றும் அவசரகால உதவி குழுக்கள் உடனடியாக சென்று மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காயமடைந்த நபர்களை சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அமெரிக்காவின் புவியியல் அமைப்பு ஆரஞ்சு அலர்ட்டுக்கான எச்சரிக்கையை வெளியிட்டு உள்ளது.
கடமைக்கு இடையூறு விளைவித்ததாக 05 சந்தேக நபர்கள் கைது.
நேற்று (2)காலை, கிளிநொச்சி பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் குழு, ராமநாதபுரம் சுத்தலாகுளம் பகுதியில் சட்டவிரோத மதுபானம் குறித்து சோதனை நடத்தி, ஒரு சந்தேக நபரைக் கைது செய்தனர்.
இதனையடுத்து இரும்பு கம்பிகள் மற்றும் பொல்லுகள் ஏந்திய குழு ஒன்று அதிகாரிகளைத் தாக்கியபோது, சந்தேக நபரை விடுவித்துவிட்டு சம்பவ இடத்திலிருந்து அதிகாரிகள் தப்பிச் சென்றனர்.
தாக்குதலில் காயமடைந்த இரண்டு பொலிஸ் சிறப்புப் படை அதிகாரிகள் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதே நேரத்தில் ராமநாதபுரம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு, அதிகாரிகள் மீதான தாக்குதல் தொடர்பாக ஆண் மற்றும் பெண் என 05 சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.
முச்சக்கரவண்டியை கழுவ களனி கங்கையில் நீர் அள்ளும் போது தவறி விழுந்த 19 வயது இளம் பெண் நீரில் மூழ்கி பலி!
முச்சக்கரவண்டியை கழுவுவதற்காக வாளியில் நீரை எடுக்க முற்பட்ட 21 வயதுடைய இளம் பெண் ஒருவர், களனி கங்கையில் தவறி வீழ்ந்து உயிரிழந்த சோக சம்பவம் நேற்று (1) மாலை பதிவாகியுள்ளது.
நுவரெலியா, பொகவந்தலாவையில் உள்ள தேயிலைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் ஐந்து பேர் கொண்ட குழுவினர், கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வழியில், முச்சக்கரவண்டியை கழுவுவதற்காக கோகிலவத்தை பகுதியில் களனி கங்கை அருகே உள்ள வாகனங்களை கழுவும் நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.
அப்போது, முச்சக்கரவண்டியை கழுவுவதற்காக ஆற்றில் இருந்து வாளியில் தண்ணீர் எடுக்க முற்பட்ட குறித்த இளம் பெண், எதிர்பாராத விதமாக ஆற்றுக்குள் தவறி வீழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதைப் பார்த்த அவருடைய 25 வயதுடைய காதலன், அவரைக் காப்பாற்றும் நோக்குடன் உடனடியாக ஆற்றுக்குள் குதித்துள்ளார்.
காதலன் அவருடன் வந்த குழுவினரால் பத்திரமாக மீட்க மீட்கப்பட்ட போதிலும் ஆற்றில் மூழ்கிய இளம் பெண்ணைக் காப்பாற்ற முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.


