இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார்... தமிழ் திரையுலகினர் அஞ்சலி!
இயக்குநரும் நடிகருமான எஸ்.எஸ்.ஸ்டான்லி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 58. அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எஸ்.எஸ்.ஸ்டான்லி இன்று ஏப்ரல்.15 உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 58. தமிழ் திரையுலகினர் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஸ்ரீகாந்த், சிநேகா ஆகியோர் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான ’ஏப்ரல் மாதத்தில்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் எஸ்.எஸ்.ஸ்டான்லி. அதற்கு முன்பு முன்னணி இயக்குநர்கள் பாலு மகேந்திரா, சசி போன்றோரிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்தார்.
கல்லூரி காதல் கதையாக உருவாக்கப்பட்டிருந்த ’ஏப்ரல் மாதத்தில்’ திரைப்படமானது வெளியான போது ரசிகர்களிடையே நல்ல வெற்றியை பெற்றது. தற்போது முன்னணி இயக்குநராக திகழ்ந்து வரும் வெங்கட் பிரபு, மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி போன்றோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளியான ’புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ திரைப்படத்தை இயக்கினார். ஆனால் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ரசிகர்கள் படத்தின் கதையை தவறாக புரிந்துகொண்டனர் என்று கூட எஸ்.எஸ்.ஸ்டான்லி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
மீண்டும் ஸ்ரீகாந்துடன் இணைந்து ’மெர்க்குரி பூக்கள்’, ’கிழக்கு கடற்கரை சாலை’ ஆகிய படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களும் 2006ஆம் ஆண்டே வெளியானது. அதன் முழுவதும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் ஸ்டான்லி. கடந்த 2007ஆம் ஆண்டு ஞான. ராஜசேகரன் இயக்கிய ' பெரியார் ' படத்தில் அறிஞர் அண்ணா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து ‘ராவணன்’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘சர்கார்’, ‘பொம்மை நாயகி’ என பல படங்களில் நடித்தார். ’ஆண்டவன் கட்டளை’ திரைப்படத்தில் போலி பாஸ்போர்ட் தயாரிப்பவர் கதாபாத்திரத்தில் அவர் வந்து செல்லும் காட்சிகள் வரவேற்பைப் பெற்றது. கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ படத்திலும் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் தொடர்ந்து சிறுநீரக பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த எஸ்.எஸ்.ஸ்டான்லியின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து இன்று காலை உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இறுதிச் சடங்குகள் இன்று மாலை வளசரவாக்கம் மின்மயானத்தில் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.