கனவுலகக் கதைகளைக் கூறி, மக்களைப் பொய்களால் ஏமாற்றிவிட்டது அரசு-சஜித் சாடல்!
நாட்டின் பொருளாதாரம் குறித்து விவாதிக்கப்படும் இந்தத் தருணத்தில் ஆளும் தரப்பு முன்வைக்கும் கருத்துக்கள் வியப்பைத் தருகின்றன!
அரசு தனது தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் மீறி, கற்பனையான கனவுலகக் கதைகளைக் கூறி நாட்டின் 220 இலட்சம் மக்களையும் பொய்களால் ஏமாற்றிவிட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு எதிர்க்கட்சித் தலைவர் மேலும் உரையாற்றுகையில்,
"நாட்டின் பொருளாதாரம் குறித்து விவாதிக்கப்படும் இந்தத் தருணத்தில் ஆளும் தரப்பு முன்வைக்கும் கருத்துக்கள் வியப்பைத் தருகின்றன. மின்சாரக் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைப்போம் எனக் கூறிவிட்டு, இன்று 75 இலட்சம் மின்சாரப் பாவனையாளர்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளனர். கொமிஷன்களையும் வரிகளையும் நீக்கி, துறைமுகத்தில் இறக்குமதியாகும் அதே விலைக்கு மக்களுக்கு எரிபொருளை வழங்குவோம் என்று தேர்தல் மேடைகளில் முழங்கியவர்கள் இன்று மக்களை ஏமாற்றிவிட்டனர்.
மறுபுறம், விவசாயிகளுக்கு இன்று உரமில்லை; கிடைக்கும் உரமும் தரமற்றதாக இருப்பதோடு கறுப்புச் சந்தையிலேயே விற்கப்படுகின்றது. நெல் கிலோவுக்கு 150 ரூபா உத்தரவாத விலை தருவதாகக் கூறினார்கள். இன்று உரம், வனயானை முரண்பாடு போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வின்றி விவசாயிகளும், மீனவர்களும் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
வாழ்க்கைச் செலவு மற்றும் சுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ஓய்வூதியர்கள் மற்றும் சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்புக்கான 15 சதவீத வட்டி வருமானம் பறிக்கப்பட்டுள்ளது. வறுமை நிலை நாட்டில் 30 வீதம் முதல் 40 வீதம் வரை அதிகரித்துள்ள போதிலும், வறிய மக்களை அரசு முற்றிலும் புறக்கணித்து வருகிறது.
நாட்டில் நிலவும் உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் மருந்துத் தட்டுப்பாடு காரணமாக மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகளுக்காக மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும், நாட்டில் ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, இந்தியாவிற்கும் வங்காளதேசத்திற்கும் இடம்பெயர்ந்து வருகின்றன. இதனால் நாட்டின் தொழிற்சாலைகள் வெளியேறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
12 இலட்சம் ரூபாவுக்கு 'விட்ஸ்' ரக காரைப் பெற்றுத் தருவோம் என வாக்குறுதியளித்து ஆட்சியைப் பிடித்தவர்கள், தற்போது வாகனங்கள் மீது 50 சதவீத வரியை விதித்துள்ளனர். கடந்த 16ஆம் திகதி முதல் இந்த வரி அமலுக்கு வருவதற்கு முன்பே, இந்த இரகசியத் தகவலைத் தமக்கு நெருக்கமான நண்பர்களுக்கு அனுப்பி, 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களுக்கான கடன் கடிதங்களை அனுப்ப வழிவகை செய்துள்ளனர். இதன் மூலம் சிலருக்கு நன்மை பெற்றுக்கொடுத்து, நாட்டிற்குப் பல பில்லியன் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
கல்விச் சீர்திருத்தங்களுக்கு நாம் ஒருபோதும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. கல்வியை ஆபாசமயப்படுத்துவதையே எதிர்த்தோம். கல்விச் சீர்திருத்தம் பேசும் இந்த அரசால் பாடசாலைகளுக்குத் தேவையான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களைக் கூட பெற்றுக்கொடுக்க முடியாமல் போயுள்ளது. மத்திய வங்கியானது சுயாதீன அமைப்பாக இருப்பதால், காணாமல் போன 25 இலட்சம் அமெரிக்க டொலர் விவகாரத்துக்குத் தான் பொறுப்பல்ல எனவும், அது நிதி அமைச்சுக்குரியது எனவும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையுடன் ஜனாதிபதி தலைமையிலான அரசு உடன்படுகின்றதா? மத்திய வங்கிக்கு இதில் பொறுப்பில்லையா எனக் கேள்வி எழுப்ப விரும்புகின்றேன்.
மத்திய வங்கியைச் சுயாதீனமாக்கும் சட்டத்திற்கு அன்று தற்போதைய ஜனாதிபதி எதிராக வாக்களித்திருந்தார். ஆனால், இன்று அவரது ஆட்சியின்கீழ் நாடு நிதி மற்றும் பொருளாதார ரீதியாக ஆபத்தில் இருப்பதாக மத்திய வங்கி ஆளுநர் அறிவிக்கிறார். இதன் உண்மை யதார்த்தத்தை அரசு விளக்க வேண்டும். "வளமான நாடு - அழகான வாழ்க்கை" என்ற கற்பனை உலகைக் காட்டி ஆட்சிக்கு வந்த அரசால் இன்று மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை நாம் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்." - என்றார்.


