பலதும் பத்தும். 11.03.2026 - மத்திய கிழக்கு போரினால் உணவுப் பொருட்களின் செலவுகள் அதிகரிக்கக்கூடும்!
மண்டைதீவு சுற்றுலா மைய விவகாரம் - நிதித் துஸ்பிரயோகம் குறித்து நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு!.
ஒரு லீற்றர் எண்ணெய் கூட வெளியேற விடமாட்டோம்" - ஈரான் அமெரிக்காவுக்கு பதிலடி!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று தெரிவித்திருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
"இந்த போர் எப்போது முடிய வேண்டும் என்பதை ஈரான் படைகளே தீர்மானிக்கும். பிராந்தியத்தின் எதிர்காலமும், போர்ச் சமன்பாடுகளும் தற்போது எமது ஆயுதப் படைகளின் கைகளிலேயே உள்ளன," என ஈரான் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.
"ஈரானின் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடருமானால், இந்தப் பிராந்தியத்திலிருந்து "ஒரு லீற்றர் எண்ணெய்" கூட ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படமாட்டாது என ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தான் தயாராக இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்க ஒளிபரப்பாளரான பாக்ஸ் நியூஸிடம், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தான் தயாராக இருப்பதாகவும், ஆனால் அது நிபந்தனைகளைப் பொறுத்தது என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
சவூதி, குவைத் மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய ஈரான்
இஸ்ரேல், அமெரிக்க நாடுகள் இரண்டும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், ஹோர்மூஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் தடை விதித்துள்ளது.
இதனால் பாரிய பிரச்சினை வெடித்துள்ள நிலையில், தற்போது சவூதி அரேபியா, குவைத் மீது ஈரான் இன்று ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. சவூதி அரேபியாவின் கிழக்கு பகுதியில் எண்ணெய் வயல் பகுதியை இலக்குவைத்தே இந்த ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த ட்ரோன் ஆனது சவூதியின் வான் பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. அதேபோல் குவைத் நாட்டின் வடக்கு, தெற்கு பகுதிகளை குறிவைத்து 6 ட்ரோன்கள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது.
இந்த ட்ரோன்களும் குவைத் வான் பாதுகாப்பு அமைப்பால் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை அதிகரிக்கப்பு!
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 300 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அதன் புதிய 3,990 ரூபாயாகும். இதன்படி, 5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 120 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய 1,602 ரூபாயாகும். 2.3 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 56 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி அதன் புதிய விலை 750 ரூபாவாகும்
மத்திய கிழக்கு போரினால் உணவுப் பொருட்களின் செலவுகள் அதிகரிக்கக்கூடும்!
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் போரினால், ஹோர்மூஸ் நீரிணை மூடப்படுவதால் உணவுப் பொருட்களின் செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்றும் அது வாழ்க்கைச் செலவுக்கான அழுத்தங்களை அதிகரிக்கும் என்றும் ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் அபிவிருத்தி அமைப்பு தெரிவித்துள்ளது.
எரிசக்தி, உரம், போக்குவரத்துச் செலவுகள் ஆகியவற்றுக்கான செலவுகள் அதிகரிப்பதனால் உணவுப் பொருட்கள் விலை அதிகரிக்கும். இது மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவுகளில் மிகப்பெரிய அழுத்தத்தைக் கொடுக்கும்.
உலகளாவிய ரீதியிலான மசகு எண்ணெயில் 38 சதவீதமும் எல்பிஜி எரிவாயுவில் 29 சதவீதமும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் 19 சதவீதமும் ஹோர்மூஸ் நீரிணையின் ஊடாகவே கொண்டு செல்லப்படுகிறது. இந்த நீரிணையினூடாக அனுப்பப்படும் தயாரிப்புக்களில் 84 சதவீதமானவை ஆசிய நாடுகளையே சென்றடைகின்றன.
எனவே, இதன் தாக்கம் ஆசிய நாடுகளில் அதிகம் உணரப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மண்டைதீவு சுற்றுலா மைய விவகாரம் - நிதித் துஸ்பிரயோகம் குறித்து நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு!.
வேலணை - மண்டைதீவு சுற்றுலா மையத்தின் உருவாக்கலில் (எகோ ரூரிசம்) அரச நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் அரச உயர் அதிகாரிகளுக்கு எதிராக கொழும்பு நிதிக் குற்றப் புலனாய்வும் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதனால் இந்த முறைப்பாடு இன்று (11) பதிவு செய்யப்பட்டுள்ளது. மண்டைதீவில் சுற்றுலா அமைச்சினால் அமைக்கப்பட்ட "எக்கோ ரூறிசம்" திட்டம் தோல்வியடைய அன்றிருந்த அரச அதிகாரிகளே காரணம் என குற்றம் சாட்டப்பட்டுவரும் நிலையில் குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.


