முற்றத்து மல்லிகை "அக்குட்டியும் - பிச்சுமணியும்"
தமிழ்நாட்டை விட எமது கலைஞர்களுக்கு முதலிடம் கொடுங்கள் - பேச்சு வழக்கில் வெளிப்படும் சிலேடைச் சொற்கள்.
நகைச்சுவை தமிழுக்கே உரிய சிறப்பு. அக்குட்டி - பிச்சுமணி என்று அழைக்கப்படும் “Valvai Sulax” -“கஜன் தாஸ்” என்ற இருவரும் தொடர்ச்சியாக, தமது நகைச்சுவை நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி வரும் கதாபாத்திரங்கள் யதார்த்தத்தை உணர்த்தி நிற்கிறது.
“இடுக்கண் வருங்கால் நகுக" என்பது திருவள்ளுவர் வாக்கு. இதன் பொருள், "துன்பம் வரும்போது மனம் தளராமல் சிரிக்க வேண்டும் என்பதாகும்.
ஆகவே, துன்பத்தை வெல்ல மகிழ்ச்சியைவிட சிறந்த வழி வேறில்லை என்ற பொருளில் நகைச்சுவையின் மேன்மை அமைந்துள்ளது.
மனதளவில் மகிழ்ச்சியாக இருந்தால், எந்த துன்பத்தையும் எளிதாக கடந்து விடலாம் என்று வள்ளுவர் அன்றே கூறிவிட்டார்.
ஆகவே, வள்ளுவர் வாக்கை மையப்படுத்தி துன்பத்தை வெல்ல “மகிழ்ச்சி” ஓர் ஆயுதம் என்பதை அக்குட்டி - பிச்சுமணி என்ற இரு கலைஞர்களும் நிறுவியுள்ளனர்.
ஈழத் தமிழர்களை மையப்படுத்திய கதாபாத்திரங்களில், சிலேடைச் சொற்கள் சில, தூய தமிழில் - சாதாரண பேச்சு மொழியில் இவர்களின் வார்த்தைகளில் இருந்து இவர்களை அறியாமலேயே வெளிப்படுகின்றன.
அதுவும் ஆங்கில கலப்பில்லாத பேச்சு மொழி. அந்த சிலேடைச் சொற்கள் பல கற்பிதங்களை உணர்த்துகிறது.
முகபாவங்கள் கூட வாழ்வியல் அர்த்தங்கள் பலதை தருகின்றன.
அதாவது, ஒரு குடும்பத்தில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் - சமூகத்தில் நடக்கும் சம்பவங்கள், இந்த இரு கலைஞர்களின் முகபாவங்களில் இருந்து வெளிப்படுகின்றன.
இருவரும் வெளிப்படுத்தும் முகபாவங்கள் இயல்பான நகைச்சுவை தன்மை கொண்டது. வாழ்வியல் உண்மைகளும் புடம்போட்டு காண்பிக்கின்றன.
ஆகவே, சமுதாய வாழ்வியல் சீர்திருத்தங்கள் எளிய முறையில் நகைச்சுவை உணர்வுடன் கையாளப்பட்ட வேண்டும் என்பதற்கு அக்குட்டியும் - பிச்சுமணியும் என்ற பாத்திரங்கள் சிறந்த வகிபாகத்தை கொடுத்துள்ளன.
அதுவும் தாயகத்தில் இருந்து ...
யூரியுப் போன்ற சமூக வலைத்தளங்களை பலர் தவறாகப் பயன்படுத்தி பிழையான கருத்தியல்களை சமூகத்தில் விதைத்து வரும் சூழலில், அக்குட்டி - பிச்சுமணி என்ற இரு கலைஞர்களும் சமூக யதார்த்தங்களை நகைச்சுவையாக வெளிப்படுத்தி சீர்திருத்தங்களுக்கு வழி வகுப்பது சிறப்பு.
சம்மந்தப்பட்டவர்களை உணர வைத்து திருந்த வழி வகுக்கும் ஏற்பாடு என்று கூடச் சொல்ல முடியும்.
இந்தியக் கலைஞர்கள் குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து வரும் கலைஞர்கள், பாடகர்கள் போன்றோரை விடவும் உள்ளூர் கலைஞர்கள் என்று பெருமைப்படக்கூடிய அக்குட்டி - பிச்சுமணி மற்றும் உள்ளூரில் உள்ள ஏனைய நகைச்சுவை கலைஞர்கள், பாடகர்கள் போன்றோரை ஈழத்தமிழர்கள் முதலில் வரவேற்க வேண்டும். உற்சாகப்படுத்த வேண்டும்.
எமது வீட்டு முற்றத்து மல்லிகையின் வாசத்தை நுகர பழக வேண்டும்.
அ.நிக்ஸன்-


