மூதூர் இரட்டை கொலை- கைது செய்யப்பட்ட 15 வயது சிறுமி!
.

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இரு பெண்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 15 வயது சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார்.
மூதூர் தாஹா நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு சகோதரிகள் நேற்று காலை வெட்டிக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் மூதூர் தாஹா நகர் பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய சிறிதரன் ராஜேஸ்வரி மற்றும் 74 வயதுடைய சக்திவேல் ராஜகுமாரி என்பவர்களே உயிரிழந்தனர்.
இவர்கள் ஓய்வுபெற்ற அரச ஊழியர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
கொலை சம்பவம் மூதூர் தாஹா நகர் பகுதியில் சிறிதரன் தர்ஷினி என்பவரின் வீட்டிலேயே இடம்பெற்றது.
கொலை சம்பவத்தின் போது, அவர்களுடன் இருந்த 15 வயது சிறுமி ஒருவரும் நேற்று காலை சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசாரணை நடாத்திய போது, குறித்த சிறுமியே இந்த இரட்டைக் கொலையைச் செய்திருப்பது தெரியவந்தது.
சிறுமி அளித்த வாக்கு மூலத்தில்,
தனது இரண்டு பாட்டிகளும் தன்னை விட மற்ற இரண்டு பேரக்குழந்தைகளை நன்றாக நடத்துவதன் காரணமாக தனக்கு ஏற்பட்ட விரக்தியில் இந்தக் கொலையைச் செய்ததாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
கொலைகளின் போது கூரிய ஆயுதம் பயன்படுத்தியதால் தனது கையிலும் காயம் ஏற்பட்டதாக அவர் பொலிஸாரிடம் குறிப்பிட்டார்.
சிறுமியின் தாய் இரவில் வேலைக்கு சென்றிருந்த போதே இந்தக் கொலைகள் நடந்ததாகவும், மேலும் இறந்த இரண்டு பெண்களில் ஒருவர் அவரது தாயார் எனவும் தெரியவந்துள்ளது.
அதன்படி குறித்த சிறுமி கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று (15) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் அறிவுறுத்தலின் பேரில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.