ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக எந்த ஆதாரமும் இல்லை: ரஷ்யா அறிவிப்பு!
ஈரானில் 1,000 பொதுமக்கள் உயிரிழப்பு - மனித உரிமைகள் குழு தெரிவிப்பு!!
ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
"ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கான எந்தவொரு ஆதாரமும் எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. உண்மையில், இந்தப் போரை நியாயப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட பிரதானமான மற்றும் ஒரே காரணமும் அதுவேயாகும்," என லாவ்ரோவ் மேலும் குறிப்பிட்டார்.
ஈரான் மீது நடத்தப்படும் இந்தத் தாக்குதல்களின் விளைவுகள் தற்போது பிராந்தியம் முழுவதும் உணரப்படுவதாகவும், குறிப்பாக அரபு நாடுகள் இதற்கான பொருளாதார ரீதியான பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த மோதல்களினால் ஏற்படும் உயிர் மற்றும் சொத்து இழப்புகள் காரணமாக அண்டை நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரஷ்யா சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 28 ஆம் திகதி ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து தாக்குதலை ஆரம்பித்தன. இந்த தாக்குதலில் ஈரானில் சிறுவர்கள் உட்பட 1,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குழுவின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, செவ்வாய்க்கிழமை பிற்பகல் வரையான காலப்பகுதியில் 181 சிறுவர்கள் உட்பட குறைந்தது 1,097 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், 100 சிறுவர்கள்உட்பட 5,400 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்துள்ளதுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தக் குழு தனது அறிக்கை முதற்கட்டமானது எனவும், மேலும் நூற்றுக்கணக்கான இறப்புகளைச் சரிபார்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.


