மீண்டும் மீண்டும் தரவுகளின்றி பொய் பேசுகின்றார்கள். வடக்கு கிழக்கு பொருளாதாரம் எதிர்கொள்ளும் அவலம் குறித்து யாரும் பேசுவதில்லை!
,

தமிழ் அதிகாரிகள்மீது போலியாக கறைபூசும் சிங்களம்!
மஹிந்த ராஜபக்சே அதிகாரத்திலிருந்த காலத்தில் இராஜாங்க அமைச்சராகவிருந்த,
திரு. தாரக பாலசூரிய அவர்கள் வடக்கு அபிவிருத்திக்கு அனுப்பப்பட்ட நிதி செலவழிக்கப்படாமல் திரும்பி வந்ததாக ஓர் பொய்யை தொடங்கி வைத்திருந்தார்.
கடந்த ஆண்டு முல்லைத்தீவு வந்த காலம்சென்ற முன்னாள் அமைச்சர் சனத் நிஷாந்த அவர்களும் வடக்கு அபிவிருத்திக்கு அனுப்பப்பட்ட நிதி செலவழிக்கப்படாமல் திரும்பி வந்ததாக அதே பொய்யை சொல்லி இருந்தார்.
இன்று யாழ்ப்பாணம் வந்த நிதி அமைச்சரான, திரு .அனுரா குமார திஸாநாயக்கவும் வடக்கு அபிவிருத்திக்கு அனுப்பப்பட்ட நிதி செலவழிக்கப்படாமல் திரும்புகின்றது என சொல்லி இருக்கின்றார்?
ஆனால் இலங்கை தேசிய கணக்காய்வு அலுவலக தரவுகளின் கீழ் வடக்கு மத்திய திறைசேரிக்கு நிதியை திருப்பி அனுப்பியது தொடர்பான எந்த தரவுகளும் இல்லை.
ஒற்றையாட்சி அரசியல் கட்டமைப்பின் கீழான பொது நிதி செயல்முறைகளை புரிந்து கொள்ளும் தரப்புகளுக்கு எந்த பிராந்திய கட்டமைப்புகளும் பணத்தை திருப்பி அனுப்ப வாய்ப்பில்லை என தெரிந்து கொள்ளலாம்.
ஆனால் மீண்டும் மிண்டும் தரவுகளின்றி பொய் பேசுகின்றார்கள்.
ஆனால் வடக்கு பொருளாதாரம் எதிர்கொள்ளும் அவலம் குறித்து யாரும் பேசுவதில்லை!
வடக்கு கிழக்கில் விவசாயத்துறையை நம்பியிருக்கும் 40 வீதமான மக்களின் விவசாய பண்ணைகளை இன்றளவும் இராணுவம் ஆக்கிரமித்து நிற்கின்றது
விலங்கு வேளாண்மைக்கு ஆதாரமான கிளிநொச்சி, முல்லைத்தீவு , மன்னார் என சகல பகுதிகளிலும் மேய்ச்சல் தரைகள் ஆக்கிரமிக் கபட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் உட்பட்டதாக சுமார் 78 வரையிலான விவசாயக் குளங்கள் வனவளத் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டு இருக்கின்றன.
அதே போல கிளிநொச்சி மாவட்டத்திலே கமநல சேவை திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட சுமார் 400 விவசாயக் குளங்கள் புனரமைக்கப்பட வேண்டிய சூழலில் வனவளத் திணைக்களத்தினர் அதனைத் தடுத்து வருகின்றனர்.
மன்னார் மாவட்டத்தில் 398 நடுத்தரகுளங்கள் கமநல திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில் 97 நடுத்தர நீர்ப்பாசன குளங்களை வனவள திணைக்களம் உரிமை கொண்டாடி வருகின்றது
அதே வவுனியா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 780 நீர்ப்பாசன குளங்களில் 157 குளங்களை வனவள திணைக்களம் இன்றுவரை ஆக்கிரமித்து உள்ளது.
மறுபுறம் இந்திய மீனவர், சட்டவிரோத தொழில் என பல காரணிகளால் கடற்தொழில் முடக்கப்பட்டுள்ளது.
இது போதாதென்று சிங்கள மீனவர்கள் வாடைக்காற்று நேரம் வடக்கு கடலை ஆக்கிரமித்து வந்து வாடியடித்து தொழில் செய்து விட்டு சோழக காற்று நேரம் திரும்பி போகின்றார்கள்
கொக்கிளாய்இ நாயாறு எல்லைப் பிரதேசம், தலைமன்னார் பியர், சவுத்பார், சிலாபத்துறை என கரையோர பிரதேசங்கள் தென்னிலங்கை சிங்கள மீனவர்கள் ஆக்கிரமித்து நிற்கின்றார்கள்
அதே போல எல்லா மீன்பிடி துறைமுகங்களும் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது
கொஞ்சம் விடப்பட்டு இருக்கும் மயிலிட்டித்துறைமுகம் கூட தென்னிலங்கை மீனவர்களின் ஆதிக்கத்தின் கீழ் தான் இருக்கின்றது
அதானி என்கிற மோசடி பேர்வழிக்கு சட்டவிரோதமாக நெடுந்தீவு, நயினாதீவு,அனலைதீவு, பூநகரி,மன்னார்,சம்பூர் என மிக வளமான பகுதிகளை விற்று கொண்டு இருக்கின்றார்கள்.
சர்வதேச ரீதியாக அதானி தொடர்ச்சியாக அம்பலப்பட்டு வரும் நிலையிலும் கூட இதை செய்கின்றார்கள்.
அதே போல வடக்கின் நீர் கட்டமைப்பை சீரழிக்கும் வகையில் சுண்ணக்கல் அகழ்வுக்கு முயலுகின்றார்கள்.
சிற்றுளியார் நியமனங்களுக்கு கூட தென்னிலங்கை சிங்களவர்களை அனுப்புகின்றார்கள்.
யாழ். மாவட்டத்தில் 36 இலட்சம் பனை மரங்கள் இருக்கின்றன,
அதே போல மட்டக்களப்பு மாவட்டத்தில் 27 இலட்சம் பனை மரங்கள் இருக்கின்றன,
மேற்படி வளத்தை மிகவினைத்திறனாக பயன்படுத்த வேண்டிய பனை அபிவிருத்தி சபை, திக்கம் வடிசாலை முழுமையாக சீரழிக்கப்பட்டுள்ளன.
மேற்படி அவலங்களின் விளைவாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் உள்நாட்டு உற்பத்திக்கு வெறுமனே4 %- 5% பங்களிப்பை மட்டுமே வழங்கின்றன.
இவ்வாறான அடிப்படை பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அதற்கான தீர்வு பற்றி பேசாமல் பொய்யை மட்டுமே மீண்டும் மீண்டும் தரவுகளின்றி பேசுகின்றார்கள்.
நன்றி : இனமொன்றின் குரல்