அமெரிக்க பள்ளிவாசலில் பயங்கர துப்பாக்கிச் சூடு - அதிகாரி உட்பட மூவர் பலி!
.
அமெரிக்காவின் சென்டியாகோவில் அமைந்துள்ள மிகப்பெரிய பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (18) இரவு அந்நாட்டு நேரப்படி 11.53 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்களின் சடலங்கள், பள்ளிவாசலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உயிரிழந்த சந்தேகநபர்கள் 17 மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் தற்கொலை செய்யப் போவதாகக் குறிப்பிட்டு கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்ததும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது மிகவும் ஆபத்தான மற்றும் கவலைக்கிடமான சம்பவம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், சம்பவம் தொடர்பாக தனது பலத்த கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


