பாராளுமன்றத் தேர்தலை நடத்திக் காண்பிக்குமாறு சவால் விடும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள.
அரசாங்கம் கூறுவதை செய்வதற்கு நாம் தயாராக இல்லை. எமது ஆதரவைக் கோரும் அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளுக்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்.

அரசாங்கம் பொதுத் தேர்தலில் பெற்றுக் கொண்ட வாக்குகளில் பெருந்தொகையை இழந்திருக்கிறது. சரியென்றால் இப்போதாவது அரசாங்கம் பதவி விலக வேண்டும். எனவே இப்போது பாராளுமன்றத் தேர்தலை நடத்திக் காண்பிக்குமாறு சவால் விடுப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு புதன்கிழமை (7) கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாம் அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம். அதன் பின்னரே தீர்மானமொன்று எடுக்கப்படும். அரசாங்கம் பொதுத் தேர்தலில் பெற்றுக் கொண்ட வாக்குகளில் பெருந்தொகையை இழந்திருக்கிறது. சரியென்றால் இப்போதாவது அரசாங்கம் பதவி விலக வேண்டும். அவர்களுக்கு மக்களிடம் வரவேற்பில்லை என்பது தற்போது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே இப்போது பாராளுமன்றத் தேர்தலை நடத்திக் காண்பிக்குமாறு சவால் விடுக்கின்றோம்.
அதனை விடுத்து அரசாங்கம் கூறுவதை செய்வதற்கு நாம் தயாராக இல்லை. எமது ஆதரவைக் கோரும் அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளுக்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். ஐக்கிய மக்கள் சக்தி இதுவரை எம்மிடம் உத்தியோகபூர்வமாக ஆதரவைக் கோரவில்லை. அவர்கள் சபைகளை நிறுவுவதற்கு வாழ்த்துகின்றோம். பேச்சுவார்த்தைகள் இன்றி எம்மால் எந்த தீர்மானத்துக்கும் வர முடியாது.
பொய்கூறி மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களை வீடுகளுக்கு அனுப்புவதே எமது இலக்காகும். ஐக்கிய தேசிய கட்சியின் எழுச்சி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. யானை சின்னத்தில் தனித்து போட்டியிட்டு எமது தனித்துவத்தை நாம் பாதுகாத்திருக்கின்றோம். கடந்த ஆண்டு ஆகஸ்டிலிருந்து ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி இணைவுக்காக நான் அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றேன்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு பகுதியே ஐக்கிய மக்கள் சக்தி. எனவே தான் பொறுப்புடன் நாம் அவர்களுக்கு அழைப்பு விடுத்தோம். இந்த தேர்தலை இலக்கு வைத்து நாம் அழைப்பு விடுத்தோம். எனவே அவர்கள் சபைகளை நிறுவுவதற்கு எமது ஆதரவு வேண்டுமெனில் அவர்களாகவே கோரிக்கை விடு;க்க வேண்டும். அவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டால் அது குறித்து ஆராயப்படும். ஐக்கிய மக்கள் சக்திக்கு மாத்திரம் சிறப்பு முன்னுரிமையளிக்கப்பட மாட்டாது என்றார்.