பாரிஸ் தீ விபத்தில் 6 பேரை மீட்ட வீரருக்குப் பிரெஞ்சுக் குடியுரிமை வழங்கி மதிப்பளிப்பு!
பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனேஸ் மற்றும் காவல்துறைத் தலைவர் பாட்ரிஸ் ஃபார் ஆகியோர் முன்னிலையில் சான்றிதழ் வழங்கப்பட்டது.
பாரிஸ் நகரில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தின் போது, தன் உயிரைப் பணயம் வைத்து 6 பேரை மீட்ட ஃபூசெய்னு சிசே (Fousseynou Cissé) என்பவருக்கு, பிரான்ஸ் அரசு அதிகாரப்பூர்வமாகக் குடியுரிமை வழங்கிச் சிறப்பித்துள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் திகதி, பாரிஸின் 18-வது வட்டாரத்தில் உள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கட்டடத்தின் ஆறாவது மாடியில், கரும்புகைக்கு நடுவே சிக்கிக்கொண்ட இரண்டு தாய்மார்கள், தங்கள் குழந்தைகளைக் காப்பாற்ற ஜன்னல் வழியே போராடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த ஃபூசெய்னு சிசே, சிறிதும் தயங்காமல் மீட்புப் பணியில் இறங்கினார். இரண்டு கட்டடங்களுக்கு இடையே உள்ள மிகக் குறுகிய சுவரோர விளிம்பில் நின்றுகொண்டு, ஒரு தற்காலிகப் பாதையை உருவாக்கினார். ஆபத்தான அந்தச் சூழலிலும், இரண்டு கைக்குழந்தைகள், இரண்டு சிறுவர்கள் மற்றும் அவர்களின் தாய்மார்கள் என மொத்தம் 6 பேரை, எரியும் கட்டடத்தின் ஜன்னலிலிருந்து மற்றொரு பாதுகாப்பான கட்டடத்திற்கு மாற்றி அனைவரின் உயிரையும் காப்பாற்றினார்.
அப்பகுதியில் சென்றுகொண்டிருந்த ஒருவர் இதைப் பதிவு செய்த காணொளி, இணையத்தில் வெளியாகி உலகெங்கும் வேகமாகப் பரவியது. ஒரே இரவில் ஃபூசெய்னு சிசே மக்களின் பார்வையில் மாபெரும் வீரராகப் போற்றப்பட்டார். இந்நிலையில், பாரிஸில் உள்ள புகழ்பெற்ற 'பாந்தியன்' (Panthéon) நினைவிடத்தில் நேற்று முன்தினம் மார்ச் 24, 2026 அன்று நடைபெற்ற சிறப்பு விழாவில், அவருக்குப் பிரெஞ்சுக் குடியுரிமை வழங்கப்பட்டது. பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனேஸ் மற்றும் காவல்துறைத் தலைவர் பாட்ரிஸ் ஃபார் ஆகியோர் முன்னிலையில் இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
முன்னதாக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவரது வீரத்தைப் பாராட்டி, அவருக்குத் தீரச்செயலுக்கான பதக்கமும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. குடியுரிமைச் சான்றிதழைப் பெற்ற பின் உணர்ச்சிபொங்கப் பேசிய அவர், "பிரெஞ்சுக் குடிமகனாக மாறுவது எனக்குப் பெருமையளிக்கிறது. இந்தக் குடியுரிமைச் சான்றிதழ் என் வாழ்வில் மிகவும் முக்கியமானது. இது பிரெஞ்சு சமூகத்தோடு என்னை முழுமையாக இணைத்துக்கொள்ள உதவுகிறது. பிரான்ஸ் ஒரு மாபெரும் தேசம்; அங்கு வாழ வேண்டும் என்பது பலரின் கனவு. அடிப்படை மனிதநேய விழுமியங்களைக் கொண்ட சுதந்திரமான நாடு இது," என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.
- சிவா சின்னப்பொடி


