வன்முறையாளர்கள் மீது பாயும் சட்டம் - பிரான்ஸ்.
"ஒரு சிறிய வன்முறைக் கும்பல் பொது இடங்களைச் சூறையாடுகிறது. இனி இது நடக்கக்கூடாது,"
பிரான்சில் வன்முறையாளர்கள் மீது பாயும் சட்டம் - இனி அரசுச் சலுகைகள் கிடைக்காது !
பொது இடங்களில் வன்முறையில் ஈடுபடுவோர் மற்றும் பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துவோருக்கு வழங்கப்படும் அரசு நிதியுதவிகள் மற்றும் சமூக நலச் சலுகைகளைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க, பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் அதிரடியான சட்ட மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மே 2025-ல், 'பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன்' (PSG) கால்பந்து அணி வெற்றி பெற்றதைக் கொண்டாட நடந்த ஊர்வலத்தில் மிகப்பெரிய வன்முறை வெடித்தது. இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் நூற்றுக்கணக்கான காவலர்கள் காயமடைந்தனர்.
"ஒரு சிறிய வன்முறைக் கும்பல் பொது இடங்களைச் சூறையாடுகிறது. இனி இது நடக்கக்கூடாது," எனக் கூறி நாடாளுமன்ற உறுப்பினர் Corentin Le Fur இந்த மசோதாவைத் தாக்கல் செய்துள்ளார்.
யாரெல்லாம் சிக்குவார்கள்? கீழ்க்கண்ட குற்றங்களுக்காகத் தண்டிக்கப்படுபவர்களின் சலுகைகள் உடனடியாக முடக்கப்படும்:
அரசின் முன் அனுமதி பெறாமல் போராட்டங்களை நடத்துவது.
ஆயுதங்களுடன் கூட்டங்களில் பங்கேற்பது.
அடையாளத்தை மறைக்க முகமூடி அணிந்து வன்முறையில் ஈடுபடுவது.
கலைந்து செல்லச்சொன்ன பிறகும் கூட்டத்தில் தொடர்ந்து நிற்பது.
எந்தெந்தச் சலுகைகள் பறிபோகும்? குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் ஓர் ஆண்டு வரை கீழ்க்கண்ட முக்கிய உதவிகள் நிறுத்தப்படலாம்:
வாழ்வாதார உதவித்தொகை (RSA): குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு அரசு வழங்கும் நிதி.
வீட்டு வாடகை மானியம் (APL): வாடகைதாரர்களுக்கு வழங்கப்படும் உதவி.
குடும்ப நல நிதி: குழந்தைகளுக்காக வழங்கப்படும் உதவித்தொகை.
கல்வி உதவித்தொகை: மாணவர்களுக்கான படிப்பு உதவி மற்றும் பயணப்படி.
வீடு புதுப்பித்தல் மானியம் (MaPrimeRénov’): வீட்டைப் பராமரிக்க வழங்கப்படும் நிதி.
இந்தச் சட்டம் வரும் 22 ஜனவரி 2026 அன்று நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வருகிறது. இது நிறைவேறினால், பிரான்சில் வன்முறைப் போராட்டங்களில் ஈடுபடுவோருக்குப் பொருளாதார ரீதியாகப் பெரும் நெருக்கடி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!


