சீமானுக்கு கொலை மிரட்டல்.. தேனி இளைஞர் கைது!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, சமூக வலைத்தளம் மூலம் கொலை மிரட்ட விடுத்த இளைஞரை தேனி சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 28ஆம் தேதி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சார்பில் சென்னை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் தேனி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதில், "மொழிவாரியாக பிரிவினையைச் சீமான் தூண்டுவதாக குறிப்பிட்டுள்ள அந்த இளைஞர், அவரது தலை துண்டிக்கப்படும் என்பன போன்ற வன்முறையைத் தூண்டும் வகையிலான வார்த்தைகளை பதிவிட்டு, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுபோன்று சீமான் பேசியது கிடையாது. ஆகையால், சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட சந்தோஷ் உள்ளிட்ட நான்கு பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், சீமானுக்கு சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த சந்தோஷ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தேனி சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.