யாழ் கலாசார மத்திய நிலையத்தின் நோக்கத்தை இழக்க முடியாது - முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி!
யாழ்ப்பாணத்தின் அடையாளமாகவும் தமிழ் மக்களின் கலாசார மையமாகவும் இருக்கும் இந்த கலாசார மையத்தை யாழ் மாநகரசபையே முழுமையாகப் பொறுப்பேற்று செயற்படுத்த வேண்டும்
யாழ் கலாசார மத்திய நிலையத்தின் நோக்கத்தை இழக்க முடியாது - முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி!
யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம் அதன் கட்டுமானத்தின் நோக்குடனும் மிடுக்குடனும் இருக்க வேண்டுமே தவிர கால ஓட்டத்துக்கு ஏற்ப பெயர் மாற்றங்களை திணிப்பதும் நோக்கங்களை மாற்றுவதுமாக இருக்க கூடாது எனவும் யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா வலியுறுத்தியுள்ளார். அத்துடன் யாழ்ப்பாணத்தின் அடையாளமாகவும் தமிழ் மக்களின் கலாசார மையமாகவும் இருக்கும் இந்த கலாசார மையத்தை யாழ் மாநகரசபையே முழுமையாகப் பொறுப்பேற்று செயற்படுத்த வேண்டும் என்றும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
யாழ் மாநகரின் மாதாந்த அமர்வு இன்றையதினம் முதல்வர் திருமதி மதிவதனி தலைமையில் நடைபெற்றது. இதன்போது கலாசார மத்திய நிலையத்தின் பராமரிப்பு குறித்து விவாதிக்கப்பட்ட போது இவ்வாறு கூறிய அவர் மேலும் கூறுகையில் - யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம், யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னரான காலத்தில் அன்றைய மகிந்த ராஜபக்ச அரசில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால்தான் கொண்டுவரப்பட்டது.
அன்று இந்தியா சென்றிருந்த அரச குழாமில் இருந்த டக்ளஸ் தேவானந்தா, 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு வரப்பிரசாதங்களை கேட்டுப் பெற்றிருந்தார். அதில் ஒன்றுதான் இந்த கலாசார மத்திய நிலையமும். நான் முதல்வராக இருந்த காலத்தில் இந்த திட்டம் நடைபெற்றதால் இதன் தாற்பரியங்கள் அனைத்தும் நன்கு உணர்ந்தவராக இருக்கின்றேன்.
அதன் வெளிப்பாடாகவே இந்த கலாசார மத்திய நிலையம் யாழ் மாநகரின் பொறுப்பில் இருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன். அத்துடன் யாழ்ப்பாணத்தின் கலசார மத்திய நிலையமாக கொண்டுவரப்பட்ட இந்த கலாசார நிலையத்தின் பெயர் எக்காரணம் கொண்டும் மாற்றப்பட முடியாத ஒன்றாகும். எனவே இந்த கலாசார நிலையம் ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்தை திசை திருப்பாது அதன் பெயரும் மாண்பும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


