20 நாள் குழந்தையை ஒரு இலட்சம் ரூபாவிற்கு விற்ற தாய்!
குழந்தையைப் பெற்றுக்கொண்ட பெண் திருமணமாகி 18 வருடங்களுக்கு மேல் ஆகியும் அவர்களுக்குக் குழந்தைகள் இருக்கவில்லை0.
தனது 20 நாட்கள் வயதான குழந்தையை ஒரு இலட்சம் ரூபா பணத்திற்கு விற்பனை செய்ததாகக் கூறப்படும் 25 வயதுடைய இளம் தாய் ஒருவரும், அக்குழந்தையை விலைக்கு வாங்கியதாகக் கூறப்படும் பெண் ஒருவரும் புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளம, கம்மந்தழுவ பகுதியில் பதிவான சம்பவம் ஒன்று தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்தே இந்த கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மதுரங்குளி, கடையமொட்டை பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரிடம் இந்தக் குழந்தை ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், குழந்தையை வாங்கிய பெண்ணின் கணவரால் 100,000 ரூபா பணம் வழங்கப்பட்டு இந்த கொடுக்கல் வாங்கல் நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் வெளிப்படுத்தல்களின்படி, இந்த இளம் தாய் அதிகளவில் மதுப்பழக்கத்திற்கு அடிமையான ஒருவருடன் தொடர்பு வைத்திருந்துள்ளார் என்பதுடன், இவர்கள் இருவருமே கடுமையான நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டு வந்துள்ளனர்.
புதிதாகப் பிறந்த குழந்தையைப் பராமரிப்பதில் ஏற்பட்ட இயலாமை காரணமாக, குழந்தை பிறந்து குறுகிய காலத்திலேயே இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளது. குழந்தையைப் பெற்றுக்கொண்ட பெண் திருமணமாகி 18 வருடங்களுக்கு மேல் ஆகியும் அவர்களுக்குக் குழந்தைகள் இருக்கவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கிடைத்த தகவலின்படி, தம்பதியினர் குறித்த கர்ப்பிணிப் பெண் குழந்தை பிரசவித்ததும், உடன்பட்ட தொகையைச் செலுத்தி குழந்தையைத் தங்களது பொறுப்பில் எடுப்பதற்கு முன்கூட்டியே திட்டமிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த குழந்தை பரிமாற்றமானது இலங்கைச் சட்டத்தின்படி அங்கீகரிக்கப்பட்ட சட்டப்பூர்வ தத்தெடுப்பு நடைமுறைகளுக்குப் புறம்பாக நடந்துள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். இதற்கமைய, குழந்தையின் உண்மையான தாய், குழந்தையை வாங்கிய பெண் மற்றும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். புத்தளம் கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


