சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் - இரட்டை வேடம் போடும் அனுர அரசு!
எது இனவாதம்?, எல்லோருக்கும் சமனான சட்டம் எங்கே? நீதிஎ ங்கே?
நேற்று போர்க்குற்றவாளிகள் சகிதம் வெற்றி தினம் கொண்டாடிய திரு அனுர குமார திஸநாயக்க இன்று தமிழரசு கட்சி பதில் செயலாளர் திரு சுமந்திரன், உட்பட்ட தமிழ் பிரமுகர்கள் சகிதம் நூலகம் ஒன்றை மட்டக்களப்பில் திறந்து வைத்திருக்கின்றார். அதாவது 2008 - 2009 ஆம் ஆண்டு காலப் பகுதியில் கொழும்பில் 11 தமிழ் இளைஞர்களை கடத்தி படுகொலை செய்த முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட, International Truth and Justice Project யினால் போர்க்குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ள ஜெனரல் சவேந்திர சில்வா, நாவற்குழியில் 23 தமிழ் இளைஞர்களை கடத்தி காணாமலாக்கிய மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்னவின் Boss பீல்டு மார்சல் சரத் பொன்சேகா உட்பட்ட தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகளுடன் திரு. அனுர குமார திஸநாயக்க மேடையை பகிர்ந்திருந்தார்.
அதே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி திரு. அனுர குமார திஸநாயக்க இன்று தமிழரசு கட்சி பிரமுகர்கள் சகிதம் நூலகமொன்றை திறந்து வைத்த சில மணி நேரத்தில் தொடர்ச்சியாக குற்றச்செயல்களில் (Habitual Offender) ஈடுபட்டு வரும் அம்பிட்டிய சுமனரத்ன தேரரை அவரின் இல்லம் தேடி சென்று சந்த்தித்து பேசியிருக்கின்றார். அதாவது சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என பேசும் திரு அனுர குமார திஸநாயக்க சர்வதேச ரீதியாக தடைகளை எதிர்கொள்ளும் அடையாளம் காணப்பட்ட போர் குற்றவாளிகளுடன் நேற்று மேடையை பகிந்திருந்தார்.
அதே போல இனவாதத்திற்கு இங்கு இடமில்லை என தொடர்ச்சியாக பொய் பேசும் திரு அனுர குமார திஸநாயக்க தமிழர்களை வெட்டுவேன், கொல்லுவேன் என தொடர்ச்சியாக இனவாதம் கக்கும் தண்டிக்கப்படவேண்டிய பிக்குவை இன்று சந்தித்து அங்கீகரித்திருக்கின்றார். சம நேரத்தில் இதே திரு அனுர குமார திஸநாயக்க என்கின்ற இந்த மனிதன் தலைமையிலான ஜேவிபி ஆட்சியாளர்கள் ஈழ எழுத்தாளர் திரு தீபச்செல்வனின் புத்தகத்தை சுங்கத்தில் தடுத்து வைத்திருக்கினார்கள்.
எது இனவாதம் ? எங்கே எல்லோருக்கும் சமனான சட்டம்? நீதி ?
மாமனிதர் திரு. ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான குற்ற வழக்கில் சிறையிலிருந்த பிள்ளையானை ராஜபக்சே குடும்ப உறுப்பினர்கள் பகிரங்கமாக சிறையில் சந்தித்தது குற்றம் என்றால், 11 தமிழ் இளைஞர்களை காசுக்காக கடத்தி கொலை செய்த சிறையிலடைக்க வேண்டிய கிரிமினல் அட்மிரல் வசந்த கரன்னாகொடவை தொடர்ச்சியாக அரச நிகழ்வுகளில் மேடையேற்றுவது குற்றமில்லையா ?
உண்மையில் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் , இனவாதத்திற்கு இடமில்லை என ஜேவிபி பேசுகின்ற போது கடந்த காலங்களில் ராஜபக்ச குடும்பம் செய்த அதே வேலைகளைத் தான் திரு. அனுர குமார திஸநாயக்க உட்பட ஜேவிபியும் செய்கின்றது.
ஒருபுறம் டொலர் நெருக்கடி , பொருளாதார சீரழிவு , உள்ளக கட்டமைப்புகளின் தோல்வி (Internal Control Failure) என தொடரும் அவலங்களுக்கு மத்தியில் குற்றவாளிகளை பாதுகாத்து இனவாதிகளை ஊக்குவிக்கின்றது.
- இனமென்றின் குரல்


