கொலைகள் தொடர்ந்து அதிகரிக்கின்றன - எங்களுக்கு என்ன பாதுகாப்புள்ளது?
.

சில துப்பாக்கி பிரயோகங்களில் ஈடுபட்ட நபர் அல்லது சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டாலும் மூன்று நான்கு மாதங்களின் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர், அதன் பின்னர் அவர்கள் மீண்டும்குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இலங்கையில் துப்பாக்கிசூட்டு சம்பவங்கள் அதிகரித்துவருகின்ற நிலையில், 2025ம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் காரணமாக 6வயது சிறுமி 9 வயது சிறுவன் உட்பட 11 உயிர்கள் பலிகொல்லப்பட்டுள்ள நிலையில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய அழுத்தத்தின் கீழ் அதிகாரிகள் உள்ளனர்.
ஆறுவயது சிறுமி, 9 வயது சிறுவன் பாதாள உலகத்தை சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவ ஆகியோர் உயிரிழந்த சம்பவங்கள் பொதுமக்கள் பாதுகாப்பாக இல்லை என்ற இந்த அதிகரித்துவரும் நெருக்கடியை வெளிப்படுத்தியுள்ளன.
இந்த வருடம் மாத்திரம் நாட்டில் 14 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல்களை சேர்ந்தவர்களின் நடவடிக்கையே இது என பலர் கருதுகின்றனர்.
சமீபத்தைய துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் மிதேனியவிலும் கொழும்பிலும் இடம்பெற்றுள்ளன, மிதேனியாவில் 39 வயது நபரும், அவரது மகளும் மகனும் இனந்தெரியாத நபர் ஒருவர் இவர்கள் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதில் உயிரிழந்தனர்.
கடவத்தை சந்தியில் இந்த சம்பவம் இடம்பெற்றது. சிறுவனும் சிறுமியும் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். உயிரிழந்தவர் கஜா என அழைக்கப்படும் அருண விதானகமகே என தெரிவித்துள்ள பொலிஸார், இவர் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் என குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை கொழும்பில் பாதளஉலகத்தை சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவ கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். நேற்று காலை துணிச்சலான விதத்தில் இந்த கொலை இடம்பெற்றது. சட்டத்தரணி போன்று வேடமணிந்த ஒருவர் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்து நீதிமன்றத்தில் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்றார்.
இந்த சம்பவங்கள் பலவற்றிற்கு போதைப்பொருள் வர்த்தகமே காரணம் என சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார். குற்றச்செயல்கள் அதிகரிப்பினால் திணறிக்கொண்டிருக்கும் பல நாடுகள் திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுப்பதற்காக கடும் நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளன என தெரிவித்த அந்த பொலிஸ் அதிகாரி இலங்கையில் வன்முறைகள் அதிகரித்துவருவதால் இலங்கையும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய தேவை உருவாகியுள்ளது என தெரிவித்தார்.
அதிகரித்துவரும் இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு மறைமுக புலனாய்வாளர்களை பயன்படுத்துதல், மற்றும் இரகசிய நடவடிக்கைகள் அவசியமாக உள்ளதாக தெரிவித்த அவர் ஒரு குழுவால் மாத்திரம் இதற்கு தீர்வை காணமுடியாது என குறிப்பிட்டார்.
இந்த குற்றகும்பல்களிற்கு எதிரான போராட்டத்திற்பு சட்டஅமுலாக்கல் அதிகாரிகளிடமிருந்து எங்களிற்கு முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என குறிப்பிட்ட அவர் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்காவிட்டால் குற்றவாளிகள் தொடர்ந்து செயற்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளை இலக்குவைத்து முன்னைய அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கை வெற்றியளித்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன, துப்பாக்கி சூட்டு சம்பவங்களிற்காக தேடப்பட்ட பல தனிநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சில துப்பாக்கி பிரயோகங்களில் ஈடுபட்ட நபர் அல்லது சந்தேகநபர் கைது செய்யப்பட்டாலும் மூன்று நான்கு மாதங்களின் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர், அதன் பின்னர் அவர்கள் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர், அனைத்து சம்பவங்களும் ஒரே பாணியிலேயே இடம்பெறுகின்றன, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் இது தொடரும், என தெரிவித்த அந்த அதிகாரி, கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடையும் வரை தடுத்துவைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்வதற்கான பொறிமுறைகள் அவசியம், அவ்வாறான பொறிமுறை இல்லாவிட்டால் சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விடுதலையாவார்கள் என அவர் தெரிவித்தார்.