போராட்டத்திற்கு ஆதரவு கோரும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள்!
யாழ் மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை பல்கலைக்கழக மாணவர்கள் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு கோரினர்.
யாழ் மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடி தமது போராட்டத்திற்கு ஆதரவு கோரினர்.
இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4 ம் திகதியை கரி நாளாக பிரகடனப்படுத்தி, வடக்கு கிழக்கில் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அதற்கு பொதுமக்களை அணி திரட்டி வலுச்சேர்க்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இதனொரு அங்கமாக குறித்த சந்திப்புக்கள் நடைபெற்றது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் சிவகுரு ஆதீன முதல்வருமான தவத்திரு வேலன் சுவாமிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் யாழ் மாவட்ட தலைவி இளங்கோதை, குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் உள்ளிட்டவர்களை மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடினர்.


